/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை சாகுபடியை மேம்படுத்த அரசு அறிவிப்பு திட்டங்கள் வந்தாச்சு!விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
தென்னை சாகுபடியை மேம்படுத்த அரசு அறிவிப்பு திட்டங்கள் வந்தாச்சு!விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு
தென்னை சாகுபடியை மேம்படுத்த அரசு அறிவிப்பு திட்டங்கள் வந்தாச்சு!விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு
தென்னை சாகுபடியை மேம்படுத்த அரசு அறிவிப்பு திட்டங்கள் வந்தாச்சு!விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : ஜூன் 24, 2024 10:47 PM
பொள்ளாச்சி:'தென்னை சாகுபடியை மேம்படுத்த தோட்டக்கலைத்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில், 91 ஆயிரத்து, 809 ெஹக்டேர் பரப்பளவில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், பொள்ளாச்சி தெற்கில், 10,800; வடக்கு, 16,200; ஆனைமலை, 22,500; கிணத்துக்கடவு, 12 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தென்னை சாகுபடியில், நோய் தாக்குதல், விலை வீழ்ச்சி போன்ற பிரச்னைகளால் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்காக தென்னையை மேம்படுத்தக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
ஆனைமலை வட்டாரத்தில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதான பயிரான தென்னையில் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையின் சார்பில் நடப்பாண்டு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தென்னை வளர்ச்சி வாரியத்தில், 1.49 கோடி மதிப்பில், மாதிரி திடல் அமைக்கும் திட்டம், 250 ெஹக்டேர் பரப்பிலும்; தென்னை தோட்டங்களை புதுப்பிக்கும் திட்டம், 200 ெஹக்டேர் பரப்பிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
மாநில அரசின் திட்டத்தின் கீழ், தென்னை பரப்பு விரிவாக்க திட்டம், தென்னை தோட்டங்களை நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றி, நுண்ணுயிர் உரங்கள் அளித்து தேங்காய் உற்பத்தியை அதிகப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தென்னந்தோப்புகளில், ஊடுபயிராக திசுவாழை வளர்ப்பு திட்டம், ஜாதிக்காய் வளர்ப்பு திட்டம், ஊடுபயிராக தென்னையில் காய்கறிகள் வளர்ப்பு திட்டம், தென்னந்தோப்பின் மண் வளம் காக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்த, 20.45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நீரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தென்னையில் உற்பத்தி திறனை பெருக்குவதற்காக நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதில், ஆனைமலை வட்டாரத்துக்கு தென்னை மற்றும் இதர பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க, 2.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகளின் நலன் கருதி, ஆனைமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறைக்கு, 4.06 கோடி நிதி பெறப்பட்டு நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், தென்னை குறித்து சந்தேகங்கள், பராமரிப்பு நடைமுறைகளை தெரிந்து கொள்ள வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகம் அல்லது உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.