/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொரியல் தட்டை சாகுபடி; விவசாயிகளிடையே ஆர்வம்
/
பொரியல் தட்டை சாகுபடி; விவசாயிகளிடையே ஆர்வம்
ADDED : நவ 27, 2024 09:26 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் பொரியல் தட்டை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டுதோறும் பொரியல் தட்டை, 100 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, கோடங்கிபாளையம் ஊராட்சியில் விவசாயிகள் சிலர் பொரியல் தட்டை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
சாகுபடி குறித்து தேவரடிபாளையம் விவசாயி போகநாதன் கூறியதாவது:
ஒரு ஏக்கர் பரப்பளவில் பொரியல் தட்டை விதைப்பு செய்துள்ளேன். பொரியல் தட்டை நடவு செய்து, 40 நாட்கள் ஆகிறது. தற்போது வரை, 25 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. இன்னும், 10 முதல் 15 நாட்களில் அறுவடை துவங்கிவிடும்.
வாரம் இரு முறை பொரியல் தட்டை பறிக்கலாம். இதில் இருமுறை குறைந்த அளவு மகசூல் இருக்கும். அதன்பின், ஒரு ஏக்கருக்கு, 600 கிலோ வரை பறிப்பு எடுக்கலாம். முறையான பராமரிப்பு, காலநிலை என அனைத்தும் சரியாக இருந்தால், கூடுதலாக, 50 முதல் 100 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
இதில், உரம், களையெடுக்கும் செலவு, பறிப்பு கூலி என, கணக்கிடும் போது, பொரியல் தட்டை ஒரு கிலோவுக்கு, 35 ரூபாய்க்கு அதிகமாக விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு, கூறினார்.