sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை

/

ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை

ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை

ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை


ADDED : அக் 08, 2025 11:39 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பாலத்துக்கு கோவையின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் 6 வழி சாலை உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரை, 16 கி.மீ. நீளம் கொண்டது அவிநாசி ரோடு. இதை கோவையின் மத்திய ரேகை என சொல்லலாம். பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. ரங்கவிலாஸ், வரதராஜா மில், ராதாகிருஷ்ணா மில், பயனீர் மில், லட்சுமி மில் என நகரின் வளர்ச்சியோடும், வரலாற்றோடும் பின்னிப் பிணைந்த மில்களும், அவிநாசி சாலையிலேயே அமைந்திருந்தன; அமைந்துள்ளன.

அவிநாசி சாலையை 6வழி சாலையாக மாற்ற, 2006--11 தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. 2008ல் ரூ.30 கோடியில் ரோடு அகலப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆயிரத்துக்கு மேலான மரங்கள் வெட்டப்பட்டன. இயற்கை நேசர்களான கோவை மக்கள், திட்டத்தின் அவசியத்தை உணர்ந்து இருந்ததால் எதிர்ப்பு காட்டவில்லை.

10 சந்திப்புகள், 16 சிக்னல்கள்

உப்பிலிபாளையத்தில் இருந்து நீலாம்பூர் வரை 10 சாலை சந்திப்புகள், 16 சிக்னல்கள் உள்ளன. வாகன பெருக்கம் அதிகரித்ததால், இந்த துாரத்தை கடக்க, 45 நிமிடத்துக்கு மேல் தேவைப்பட்டது. இதை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க அரசு முடிவு எடுத்தது. 2016 ஆகஸ்ட் 4ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.1,791 கோடி ஒதுக்கீடு

முதல்வர் பழனிசாமி ஆட்சியில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்ட ரூ.1621 கோடி ஒதுக்கப்பட்டது. 2020 மார்ச் 24ல் நிர்வாக ஒப்புதல் தரப்பட்டது. ஹைதராபாத் நிறுவனமான கே.என்.ஆர். கன்ஸ்ட்ரகஷனஸ், 2020 ஆகஸ்ட் 29ல் வேலை தொடங்கியது. 48 மாதங்களில் கட்டுமானம் முடிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

2021ல் ஆட்சி மாறியது.

முதல்வர் ஸ்டாலின் கூடுதல் தேவைகளுக்கு ஒப்புதல் அளித்து, திட்ட செலவையும் ரூ.1791.23 கோடியாக அதிகரித்தார்.

4 ஏறுதளம், இறங்கு தளம்

4வழி பாதையான இந்த மேம்பாலத்தில், அண்ணாதுரை சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், விமான நிலையம் ஆகிய நான்கு இடங்களில் ஏறுதளங்கள் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மத்தியில், 4 அடி அகலத்துக்கு சென்டர் மீடியன் எனும் சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பையே தொடர் தொட்டிகளாக அமைத்து வழி நெடுகிலும் கண்ணை கவரும் 4,000 போகன் வில்லா செடிகள் வைத்துள்ளனர். இவற்றுக்கு சொட்டு நீர் பாசனமும், பாலத்துக்கு கீழே உள்ள தோட்டங்களுக்கு தெளிப்பு நீர் பாசன வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாசு ஏற்படுத்தாத மின் விளக்குகள் மேலும் கீழும் பொருத்தப்பட்டுள்ளன.

ரோலர்கள் அமைப்பு

பாளம் பாளமாக பொருத்தப்படும் மேம்பாலங்களில் 40, 50 மீட்டருக்கு ஒரு இடைவெளி இருப்பதால், வாகனங்கள் கடக்கும்போது தடக் தடக் என்ற சத்தம் எழுவது உண்டு. இந்த பாலத்தில், சைனஸ் பிளேட் விரிவு இணைப்பு என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த இடங்களை கடக்கும்போது எழும் ஒலியின் அளவும், அதிர்வும் குறைவாக இருக்கும்.

ஏறு தளம், இறங்கு தளங்களில் பாலத்தின் மேல்பகுதியை அடையும்போது, வாகனங்கள் பக்கவாட்டில் மோதி விபத்து நேராமல் தடுக்க, ரோலர்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயரமான பக்கச்சுவர்கள், பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

மழை நீர் வடிகால்

மழை பெய்யும்போது பாலத்தின் மீது விழும் மழை நீர், குழாய் வழியாக வடிந்து, கீழே அமைக்கப்பட்டுள்ள 220 ஆழ்துளைகள் வாயிலாக பூமிக்குள் செல்லும் வகையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளனர். ஒன்றரை மீட்டர் அகல நடைமேடையுடன் கூடிய வடிகால் அமைப்பு, 13 ஆயிரத்து 560 மீட்டர் நீளத்துக்கு திட்டமிட்டனர்; 9115 மீட்டர் நீளத்துக்கு அமைத்துள்ளனர்.

மேம்பாலத்தின் சிறப்புகள்


நீளம்: 10.1 கிலோமீட்டர்
ஓடுதள அகலம்: 17.25 மீ.
ஆழ்துளைகள்: 1,124
ஏறு தளங்கள்: 4
இறங்கு தளங்கள்: 4
அணுகுசாலைகள்: கோல்டுவின்ஸ் பக்கம் 183 மீ.
உப்பிலிபாளையம் சைடு 267 மீ.
கான்கிரீட்: 2,66,208 கன மீட்டர்
ஸ்டீல்: 36,137 டன்
சிமென்ட்: 1,11,155 டன்
தார்: 5,807 டன்
எஞ்சியுள்ள பணிகள்
திட்ட மதிப்பு ரூ.1,791.23 கோடி;
இதுவரை செலவு ரூ.1,486 கோடி
வழக்கு காரணமாக, அண்ணாதுரை சிலை அருகில் ஏறுத ளமும், நடைமேடையுடன் கூடிய வடிகால் 4,445 மீட்டருக்கும் அமைப்பது தடைபட்டுள்ளது. விரைவில் வழக்குகள் முடிந்து, இந்த வேலைகள் முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.



ஏறும், இறங்கும் இடங்கள்


கோல்டுவின்ஸ் நோக்கி செல்பவர்கள், பி.ஆர்.எஸ். மைதானம் அருகிலும், பீளமேடு அருகிலும் பாலத்தில் ஏறலாம். பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், அரவிந்த் கண் மருத்துவமனை முன்பும் இறங்கலாம். இதில், பி.ஆர்.எஸ். மைதானம் அருகே ஏறுதளம் அமைக்கும் பணி, வழக்கால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து செல்வோர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி அருகிலும், ஹோப் காலேஜ் பகுதியிலும் பாலத்தில் ஏறலாம். நவ இந்தியா சிக்னலுக்கு 100 மீட்டர் முன்னதாகவும், அண்ணாதுரை சிலை சந்திப்புக்கு முன்னதாக பழமுதிர் நிலையம் அருகிலும் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



சுரங்க நடைபாதை இல்லை


கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.எச். மருத்துவமனை, ஜி.ஆர்.ஜி. பள்ளி, பி.எஸ்.ஜி. கல்லுாரி, லட்சுமி மில் சந்திப்பு ஆகிய ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திலும் இப்பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க உத்தேசித்துள்ளதால், இப்போது சுரங்க நடைபாதை வேண்டாம் என கைவிடப்பட்டுள்ளது.



இரவில் நடந்த வேலை


அவிநாசி ரோட்டில் எந்நேரமும் வாகன போக்குவரத்து காணப்படுகிறது என்பதால், நகருக்கு வெளியே சின்னியம்பாளையத்தில் 'பிளான்' அமைக்கப்பட்டு, 'கர்டர் பாக்ஸ்' தயாரிக்கப்பட்டது. பகலில் கட்டுமான பணி செய்தால் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக இருக்கும் என நினைத்த நெடுஞ்சாலைத்துறை, இரவு நேரத்தில் மட்டுமே ஓடுதளம் அமைக்கும் பணியை மேற்கொண்டது. இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை வேலை நடந்தது. பகலில் மற்ற வேலைகள் நடந்தன.



43 மரங்கள் மறுநடவு


மேம்பாலம் அமைந்துள்ள வழித்தடத்தில் இருந்த மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. அவற்றை வேரோடு பெயர்த்தெடுத்து மறுநடவு செய்ய இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அதன்படி, அரச மரம், வேப்ப மரம், மந்தாரை, புங்கன், சீமை வாகை, கொன்றை, கற்பூர மரம், வங்காள ஆல மரம், மலை கருங்காலி என, 43 மரங்களை பெயர்த்தெடுத்து, பல்வேறு இடங்களில் மறுநடவு செய்யப்பட்டன.



நிலம் எடுக்க ரூ.228 கோடி


மேம்பாலம் கட்ட 19,8235 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக ரூ.228 கோடி வழங்கப்பட்டது. சிலர் ஆட்சேபம் தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நெடுஞ்சாலை துறை பொது நலன் சார்ந்த வாதங்கள் வைத்து, கோர்ட் அனுமதியை பெற்றது.



தாமதம் ஏன்


2020 ஆகஸ்டில் மேம்பால பணி துவங்கியது. 48 மாதங்கள் (4 ஆண்டுகள்) அவகாசம் அளிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் பணி முடக்கம் ஏற்பட்டது. நிலம் எடுப்பு தொடர்பான வழக்கு முடியவும் தாமதம் ஆனது. பின்னர் ரயில்வே பகுதியில் ஒப்புதல் பெற தாமதம் ஏற்பட்டது. இலக்கு 2024 ஆகஸ்டாக நீட்டிக்கப்பட்டது. அது டிசம்பர் வரை நீடித்தது. ஒருவழியாக 2025 அக்டோபரில் விடிவு பிறக்கிறது.



பயண நேரம் குறையும்


கோவை விமான நிலையம் செல்வோருக்கு மட்டுமின்றி, கோவை நகர் பகுதியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி நோக்கிச் செல்வோருக்கும், அப்பகுதியில் இருந்து வருவோருக்கும் இப்பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிக்னல் இல்லாமல் தடங்கலின்றி செல்லலாம் என்பதால் பயண நேரத்தை குறைக்கும். வெளியூர் வாகனங்கள் அனைத்தும் மேலே ஏறி விடுவதால், அவினாசி சாலையை பயன்படுத்தும் கோவை மக்கள் நெருக்கடி இல்லாமல் செல்லவும் வழி பிறக்கிறது.



'பாக்ஸ் கர்டர்' மாடல்


மேம்பாலத்தை 306 துாண்கள் தாங்குகின்றன. 30 மீட்டர், 40 மீட்டர் இடைவெளியில் துாண்கள் அமைந்துள்ளன. ஹோப் காலேஜ் ரயில்வே மேம்பால பகுதியில் மட்டும், 52 மீட்டர் இடைவெளி விடப்பட்டு உள்ளது. 'செக்மென்ட்' முறையில் ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்கிறது. 3 மீட்டர் அகலமுள்ள செக்மென்ட் 72 டன் எடை கொண்டது; 2 மீட்டர் அகலமுள்ள செக்மென்ட் 42 டன் எடை கொண்டது. 100 டன் எடை தாங்கும் கிரேன் மூலமாக இவை துாக்கி பொருத்தப்பட்டது. இது, 'பாக்ஸ் கர்டர்' மாடல். இந்த 'செக்மென்ட்டுகள், 38.62 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இரு துாண்களுக்கு இடையே, 'லாஞ்சிங் கர்டர்' இயந்திரம் மூலமாக இணைக்கப்பட்டு, ஓடுதளமாக அமைக்கப்பட்டது.



2023ல் சொன்னது நடந்தது


2023 ஜனவரி 30ல் கோவை மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் பேசும்போது, ''அரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர் ஜி.டி.நாயுடு. அவரது நினைவை போற்றும் வகையில், அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு, ஜி.டி.நாயுடு பெயரை சூட்ட வேண்டும்,'' என கேட்டிருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us