/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு... ஆதரவு தேவை!பாரம்பரியம் தொடர தொழிலாளர் எதிர்பார்ப்பு
/
பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு... ஆதரவு தேவை!பாரம்பரியம் தொடர தொழிலாளர் எதிர்பார்ப்பு
பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு... ஆதரவு தேவை!பாரம்பரியம் தொடர தொழிலாளர் எதிர்பார்ப்பு
பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு... ஆதரவு தேவை!பாரம்பரியம் தொடர தொழிலாளர் எதிர்பார்ப்பு
ADDED : அக் 12, 2025 10:49 PM

உடுமலை:'தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்கள் வாங்கினால், பல்வேறு இடையூறுகளை சந்தித்தும் பாரம்பரியமாக கைத்தறி நெசவு செய்யும் தங்கள் குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும்,' என நெசவு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை வாளவாடி, பூளவாடி, மலையாண்டிப்பட்டணம், புக்குளம், குரல்குட்டை உள்ளிட்ட கிராமங்களில், பாரம்பரியமாக கைத்தறி நெசவில் நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய் குறைவு, அங்கீகாரம் இல்லாதது மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்காமல், பல்வேறு பாதிப்புகளை இக்குடும்பத்தினர் சந்தித்து வருகின்றனர். இருப்பினும், கைத்தறி நெசவை கைவிடாமல், இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிக்கைக்காக, சில மாதங்களுக்கு முன் பெறப்பட்ட ஆர்டர்களை முடிக்கும் பணியில், தற்போது இத்தொழிலாளர்கள் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, தனியாரிடம் இருந்து நுால் வாங்கி, கூலிக்கு நெசவு செய்தல் முறையையே பெரும்பாலானவர்கள் பின்பற்றி வருகின்றனர்.
மூன்று நாட்கள் வரை, இருவர் உழைப்பில், ஒரு பட்டுச்சேலை உருவாக்கப்பட்டால், அவர்களுக்கு, சராசரியாக 1,100 ரூபாய் வரை மட்டுமே வருவாய் கிடைக்கிறது.
சீசன் இல்லாத சமயங்களில் ஆர்டர் இல்லாமல், வருவாய் இழப்பையும் சந்தித்து வருகின்றனர். ஆனால், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கைத்தறி பட்டு நெசவை மட்டும் அவர்கள் கைவிடவில்லை.
உடுமலை பகுதியிலுள்ள கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: கிராமங்களில் முன்பு, பண்டிகை சீசனுக்கு முன்பாக உள்ளூர் ஆர்டர்கள் அதிகளவு கிடைக்கும். நுால் மற்றும் இதர பொருட்களை நாங்களே வாங்கி நெசவு செய்து கொடுத்து வந்தோம்.
படிப்படியாக கைத்தறி நெசவு ரகங்களுக்கு மவுசு குறைய துவங்கியது. இதனால், பெரும்பாலான மாதங்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டோம்.
இதனால், பெரிய நிறுவனங்களுக்கு கூலி அடிப்படையில், பட்டு நெசவு செய்து வருகிறோம். மக்கள், பண்டிகை காலங்களில், கைத்தறி ரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடைகளில் வாங்கினால், எங்களுக்கு ஆண்டு முழுவதும் ஆர்டர் கிடைக்கும்.
தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் நமது பாரம்பரிய ரகங்களை அணிய மக்கள் முன்வர வேண்டும். நம் நாட்டின் பாரம்பரிய கைத்தறி நெசவு தொழில், முற்றிலுமாக காணாமல் போவதை தடுக்க, மக்கள் இத்தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும்.
அதே போல், கைத்தறி ரகங்கள் என்ற பெயரில், விசைத்தறி ரகங்களை விற்பனை செய்வதும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
நெசவாளர்களுக்கு அரசு அறிவிக்கும் பெரும்பாலான நலத்திட்டங்கள், முழுமையாக கிடைப்பதில்லை. பல்வேறு இடையூறுகளை சந்தித்தாலும், பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
இளைய தலைமுறையினர் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட தயக்கம் காட்டுவதால், இத்தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
தேவை முகாம் கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள கிராமங்களில், அரசின் நலவாரியம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் எளிதாக அவர்களுக்கு கிடைக்கும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
நலத்திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது, பிற முகாம்களில் சென்று விண்ணப்பிக்க தயக்கம் காட்டுவது போன்ற காரணங்களால், அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெயரளவுக்கே பலன் தருவது குறிப்பிடத்தக்கதாகும்.