ADDED : ஜூலை 07, 2025 12:54 AM
கோவை; கியூ பிரிவு தலைமைக் காவலரை தாக்கி, அவரது மனைவியிடம் நகை பறித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கியூ பிரிவு தலைமை காவலர் பார்த்திபன், 42. இவரது மனைவி, ரேவதி, 38; தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் உணவு அருந்த, எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்றார்.
சாப்பிட்டு முடித்த பின், அணுகு சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், திடீரென அவர்களை தாக்கினர்.
மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதில், பார்த்திபனின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்நபர்கள் பார்த்திபனின் மனைவி அணிந்து இருந்த தாலி செயின், மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் உள்ளிட்ட ஏழு சவரன் நகைகளை, பறித்து தப்பினர்.
காயமடைந்த பார்த்திபன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சூலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.