ADDED : ஆக 28, 2025 11:11 PM

வால்பாறை;வால்பாறையில், காற்றுடன் கனமழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப்பருவ மழை துவங்கியது. மழை தீவிரமடைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த ஜூன் 26ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தொடர் மழையால் பி.ஏ.பி., பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து வெயில் நிலவியதால், உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் மகிழ்ச்சியடைந்தனர்.
நேற்று முன்தினம் முதல் மீண்டும் பருவமழை பரவலாக பெய்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் காற்றுடன் கனமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துவருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.18 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,259 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 859 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மி.மீ.,):
சோலையாறு - 48, பரம்பிக்குளம் - 34, ஆழியாறு - 17, வால்பாறை - 32,மேல்நீராறு - 58, கீழ்நீராறு -34, காடம்பாறை - 17, மேல்ஆழியாறு - 7, சர்க்கார்பதி - 30, வேட்டைக்காரன்புதுார் - 17, மணக்கடவு - 16, துாணக்கடவு - 13, பெருவாரிப்பள்ளம் - 10, நவமலை - 8, பொள்ளாச்சி - 4 என்ற அளவில் மழை பெய்தது.