/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகருக்குள் வரும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்! உயிர் பயத்துடன் பொதுமக்கள் பயணம்
/
நகருக்குள் வரும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்! உயிர் பயத்துடன் பொதுமக்கள் பயணம்
நகருக்குள் வரும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்! உயிர் பயத்துடன் பொதுமக்கள் பயணம்
நகருக்குள் வரும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்! உயிர் பயத்துடன் பொதுமக்கள் பயணம்
ADDED : ஆக 10, 2025 10:38 PM

கோவை: அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பின், மாநகருக்குள் நுழையும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி, சாலையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாகனப்பெருக்கத்தால், கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேம்பாலங்கள் கட்டுமான பணி நடந்து வருவதால், நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மாநகருக்குள் காலை 8:00 முதல் காலை 11:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஏட்டில் மட்டுமே உள்ளது.
அனைத்து நேரங்களிலும் டிப்பர் லாரிகள், சரக்கு லாரிகள், சரக்கு வேன்கள், கன்டெய்னர்களை ஏற்றி வரும் லாரிகள், காஸ் டேங்கர்கள் என, அனைத்து வகை சரக்கு வாகனங்களும், நகருக்குள் எவ்வித தடையுமின்றி வலம் வருகின்றன.
டிப்பர் லாரிகள் எவ்வித வேகக்கட்டுப்பாடும் இன்றி, அதிவேகத்தில் பிரதான சாலைகளில் செல்கின்றன. இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு, பயணிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, பெண் வாகன ஓட்டிகளின் நிலை மோசமாக உள்ளது. கடந்த, ஏப்., மாதம், வடவள்ளி இடையர்பாளையம் சாலையில் ஒரு பெண், டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
2024ம் ஆண்டில், கோவை மாநகர பகுதிகளில் மொத்தம் 1,170 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில், 286 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜன., முதல் ஜூலை வரை நடந்த சாலை விபத்துகளில், கோவையில், 22 விபத்துகளில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச் செல்லும், கனரக வாகனங்களுக்கு உள்ள விதிவிலக்கை பிற கனரக வாகனங்களும் பயன்படுத்தி, நகருக்குள் நுழைகின்றன.
இந்த விஷயம் தெரிந்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. விதிமீறும் கனரக வாகனங்களை, கண்டுகொள்ளாமல் இருக்க ரூ.500 முதல் ரூ1,500 வரை அளித்து 'கவனிப்பதாக' தெரிகிறது.
போக்குவரத்து காவல்துறை உயரதிகாரிகள், இந்த விஷயத்தை விசாரித்து, கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாத நேரத்தில் நகருக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.
மாநகர போக்குவரத்து போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில்,'குறிப்பிட்ட நேரத்துக்கு பின் நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு முதல் முறை ரூ.1,000, இரண்டாம் முறை, ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. விதிமீறல்களுக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்படுகிறது. லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளோம். காஸ் சிலிண்டர் லாரிகள், ரேஷன் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு கட்டுப்பாடு இல்லை' என்றார்.
ஜன., முதல் ஜூலை வரை
கனரக வாகன விபத்துகள்
உச்ச நேரத்தில் நகருக்குள் வந்ததாக பதிவான வழக்குகள்: 107 மொத்த விபத்துகளின் எண்ணிக்கை: 62 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 22 காயமடைந்தவர்களின் எண்ணிக்கை: 40