/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மக்களுக்கு இதோ மகிழ்ச்சியான செய்தி! சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க புதிய முயற்சி
/
கோவை மக்களுக்கு இதோ மகிழ்ச்சியான செய்தி! சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க புதிய முயற்சி
கோவை மக்களுக்கு இதோ மகிழ்ச்சியான செய்தி! சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க புதிய முயற்சி
கோவை மக்களுக்கு இதோ மகிழ்ச்சியான செய்தி! சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க புதிய முயற்சி
ADDED : அக் 16, 2024 11:02 PM

கோவை : கோவை அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்துக்கு கீழே சுரங்கப்பாதையில், மழை நீர் தேங்குவதை தடுக்க, உப்பிலிபாளையம் பகுதியில், 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை, மாநகராட்சி நேற்று துவக்கியது. இதன் மூலம், ஒரு நிமிடத்தில் ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீரை வடிகாலில் இறக்கி, வாலாங்குளத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
கோவை நகரப் பகுதியில் சிறிது நேரம் மழை பெய்தால் போதும்; நஞ்சப்பா ரோடு, மில் ரோடு, புரூக் பாண்ட் ரோடு ஆகிய வழித்தடங்களில் இருந்து, ஆறு போல் வழிந்தோடி வரும் மழை நீர், கழிவு நீரோடு கலந்து, அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழே உள்ள, சுரங்கப் பாதைக்கு வந்தடைகிறது.
மோட்டார் பம்ப் இயக்கி, வாலாங்குளத்துக்கு தண்ணீரை கடத்தினாலும், இப்பகுதி தாழ்வாக இருப்பதால், அரை மணி நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது.
போக்குவரத்து நெருக்கடி
வாகன ஓட்டிகள் சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மில் ரோடு, கூட்ஸ் ஷெட் ரோடு, ப்ரூக் பாண்ட் ரோடு, அவிநாசி ரோடு ஆகிய நான்கு வழித்தடங்களில் வரும் வாகனங்கள், மேம்பாலத்தை ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது, போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகின்றன.
சுரங்கப்பாதையில் தணணீர் தேங்காமல் இருக்க, சென்னையில் இருந்து தருவிக்கப்பட்ட மோட்டார்கள் பொருத்தி, பம்ப் செய்யப்படுகிறது. இருப்பினும், கடந்த முறை மின்சாரம் தடைபட்டதால், மோட்டார் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், வழக்கத்தை காட்டிலும் மிக அதிகமாக சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கியது.
வீடியோ எடுத்து கணக்கு
அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அதிகாரிகள், சுரங்கப்பாதைக்கு எந்தெந்த வழித்தடங்களில் தண்ணீர் வருகிறது என கன மழை பெய்த சமயத்தில் வீடியோ எடுத்து, தண்ணீரின் வேகம் மற்றும் அளவை கணக்கிட்டனர்.
நஞ்சப்பா ரோடு, அவிநாசி ரோடு, ஆடீஸ் வீதி ஆகிய பகுதிகளில் இருந்து சுரங்கப் பாதைக்கு தண்ணீர் வழிந்தோடுவது கண்டறியப்பட்டது. இதற்கு மாற்று திட்டத்தை மாநகராட்சி வடிவமைத்திருக்கிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
நஞ்சப்பா ரோடு, ஆடீஸ் வீதி மற்றும் அவிநாசி ரோடு புதிய மேம்பாலத்தில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீரை வாலாங்குளத்துக்கு திருப்பும் வகையில், உப்பிலிபாளையம் சந்திப்பில், 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில், பாக்ஸ் வடிவிலான கான்கிரீட் மழை நீர் வடிகால் பதிக்கப்படுகிறது.
2.6 மீட்டர் ஆழம், 2.6 மீட்டர் அகலத்துக்கு தயாரித்துள்ள கான்கிரீட் பாக்ஸ் வடிவங்களை, பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 'பிரிகாஸ்ட்' கான்கிரீட் பாக்ஸ்கள் தருவிக்கப்பட்டுள்ளன. இப்பணியை ஒரே நாளில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நஞ்சப்பா ரோட்டில் இருந்து உப்பிலிபாளையம் நோக்கி, தற்போதுள்ள மழை நீர் வடிகாலை புதுப்பித்துக் கட்டி, மழை நீர் தருவிக்கப்படும். இதேபோல், அவிநாசி ரோடு புதிய மேம்பாலத்தில் வடிந்து வரும் தண்ணீர், பாலத்துக்கு இருபுறமும் நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்படும் மழை நீர் வடிகால் இணைக்கப்படும்.
சுரங்கப்பாதை இனி ப்ரீ!
ஒரு நிமிடத்தில், ஐந்து லட்சம் லிட்டர் மழை நீர், ரோட்டுக்கு கீழ் பதிக்கப்படும் வடிகாலில் கீழிறக்கப்படும். செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா வழியாக, அரசு கலை கல்லுாரி ரோட்டை கடந்து, வாலாங்குளத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பழைய மேம்பாலத்தின் சுரங்கப்பாதைக்கு தண்ணீர் செல்வது குறையும்.
இதேபோல், சிவானந்தா காலனி சுரங்கப்பாதைக்கு முன், மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீரை கீழிறக்கி, சங்கனுார் பள்ளத்துக்குச் சேர்ப்பிக்க, கான்கிரீட் பாக்ஸ் பதிக்க இருக்கிறோம்.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.
ஒரு நிமிடத்தில், ஐந்து லட்சம் லிட்டர் மழை நீர், ரோட்டுக்கு கீழ் பதிக்கப்படும் வடிகாலில் கீழிறக்கப்படும். செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா வழியாக, அரசு கலை கல்லுாரி ரோட்டை கடந்து, வாலாங்குளத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பழைய மேம்பாலத்தின் சுரங்கப்பாதைக்கு தண்ணீர் செல்வது குறையும்.