/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிவேக லாரிகளுக்கு தேவை 'கடிவாளம்!' ; இரவானால் கண்மூடித்தனம்
/
அதிவேக லாரிகளுக்கு தேவை 'கடிவாளம்!' ; இரவானால் கண்மூடித்தனம்
அதிவேக லாரிகளுக்கு தேவை 'கடிவாளம்!' ; இரவானால் கண்மூடித்தனம்
அதிவேக லாரிகளுக்கு தேவை 'கடிவாளம்!' ; இரவானால் கண்மூடித்தனம்
ADDED : மே 18, 2025 12:07 AM

கோவை: இரவு நேரங்களில் அதிவேகத்தில் செல்லும் லாரிகளால், கடந்த நான்கு மாதங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே, விதிமீறி இயக்கப்படும் லாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாநகர பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிவேக இயக்கத்தால் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. 2024ம் ஆண்டில், கோவை மாநகர பகுதிகளில் மொத்தம் 1,170 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில், 286 பேர் உயிரிழந்தனர்.
மாநகரில் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை (ஹாட்ஸ்பாட்) கண்டறிந்து, விபத்தை குறைப்பதற்கு, வேகத்தை அமைத்தல், சாலை தடுப்புகள் போடுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, விபத்து நடந்த இடங்களில் அபாய எச்சரிக்கை வரைந்து வாகன ஓட்டிகள் மெதுவாக, கவனமாக செல்ல, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும், சில வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி இயக்கி விபத்து ஏற்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, இது போன்ற லாரிகள்தான் எமன்.
இரவு, 11:00 மணியில் இருந்து காலை 6:00 மணி வரை லாரி ஓட்டுநர்களில் சிலர், சாலை விதிகள் இருப்பதையே மறந்து விடுகின்றனர். சாலை விதிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
கடந்த ஜன., முதல் ஏப்., வரை நடந்த சாலை விபத்துகளில், கோவை மாநகர கிழக்கு பகுதிகளில் 42 பேர், மேற்கு பகுதிகளில் 49 பேர் என 91 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 11 பேர் லாரி மோதி மட்டும் உயிரிழந்துள்ளனர்.
போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கூறுகையில், ''லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளோம். அனைத்து நேரங்களிலும் சாலை விதிகளை பின்பற்றி லாரிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விதிகளை மீறும் லாரிகள் மீது, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனினும், நள்ளிரவு முதல் அதிகாலை வரையுள்ள நேரங்களில், அதிவேகத்தில் இயக்குகின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.