/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு... கூடுதல் பாதுகாப்பு!
/
மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு... கூடுதல் பாதுகாப்பு!
மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு... கூடுதல் பாதுகாப்பு!
மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு... கூடுதல் பாதுகாப்பு!
ADDED : பிப் 05, 2024 01:01 AM
பெ.நா.பாளையம்:அண்டை மாநிலமான கேரளாவில், நக்சல் நடமாட்டம் உள்ளதால், தமிழக, கேரள எல்லைப்பகுதியான கோவை மாவட்ட மலையோர கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை புறநகர் வடக்கு பகுதியில், கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில், 435 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், ஆனைகட்டி வட்டாரத்தில் ஆனைகட்டி பஸ் ஸ்டாண்ட், துாமனுார், கொண்டனுார், ஜம்புகண்டி ஆகிய இடங்களிலும், பாலமலை வட்டாரத்தில் குஞ்சூர்பதி என்ற மலை கிராமத்திலும் வாக்குச்சாவடிகள் உள்ளன.
ஆனைகட்டியை ஒட்டியுள்ள கேரள எல்லைப் பகுதியில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. கேரள போலீசார் மற்றும் மாவோயிஸ்ட் தடுப்பு அதிரடி படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக, கேரளா எல்லையான மாங்கரை, ஆனைகட்டி ஆகிய பகுதிகளில், 'சிசிடிவி', 'இன்ப்ரா ரெட்' எனும் இரவில் அடையாளம் காணும் கேமராக்களுடன் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர, காட்டு யானைகளின் நடமாட்டமும் இருப்பதால், இரவு நேரங்களில், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள், வனவிலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் குறித்தான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி வனவிலங்குகள் மற்றும் நக்சல் நடமாட்டம் உள்ள மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில், கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கூறுகையில், 'இம்முறை, மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வனத்துறையினர் மற்றும் மாவோயிஸ்ட் தடுப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வாக்குச்சாவடியில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். வாக்குச்சாவடியில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படும்.
தவிர, மாவோயிஸ்ட் தடுப்பு அதிரடிப்படையினர் கூடுதல் எண்ணிக்கையில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். வனவிலங்குகளை விரட்ட வனத்துறையினர் ரோந்து வாகனம், பட்டாசு ஆகியவற்றுடன் தயார் நிலையில் இருப்பர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், மலை கிராமங்களில் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, புதிய நபர்களின் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு நடத்துவர். மலை கிராமங்களில் ஆங்காங்கே, கூடுதல் வாகன சோதனைக்கும் ஏற்பாடு செய்யப்படும்' என்றனர்.

