/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரலாறு - தமிழ் கற்றால் வேலைவாய்ப்பு பயிலரங்கத்தில் தகவல்
/
வரலாறு - தமிழ் கற்றால் வேலைவாய்ப்பு பயிலரங்கத்தில் தகவல்
வரலாறு - தமிழ் கற்றால் வேலைவாய்ப்பு பயிலரங்கத்தில் தகவல்
வரலாறு - தமிழ் கற்றால் வேலைவாய்ப்பு பயிலரங்கத்தில் தகவல்
ADDED : பிப் 22, 2024 09:09 PM
- நமது நிருபர் -
''தமிழ், வரலாறு பாடங்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன,'' என தமிழக தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கூறினார்.
பல்லடம் அரசுக்கல்லுாரியில், 'வேர்களைத் தேடி' எனும் தலைப்பில், பன்னாட்டு பயிலரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.
தமிழக தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் பேசியதாவது:
தொல்லியலும், வரலாறும், தமிழும் இணை பிரியாதவை. முற்காலத்தில், கொடுமணலில் தயாரிக்கப்பட்ட மணிகள் ரோமாபுரி வரை சென்றன.
அன்றைய காலத்தில், பொருட்களை பெற தங்க நாணயத்தை பயன்படுத்தினர். இவ்வாறு, ரோமாபுரியில் இருந்து ஏராளமான தங்கம் தமிழகத்துக்கு வந்ததால், ரோமாபுரியின் கருவூலமே காலியானது.
ஒரு காலகட்டத்தில் அரசு நடத்துவதற்கே, சிரமமான சூழல் உருவானது. தமிழகத்துடன் வாணிபம் நடந்தால், ரோமாபுரி என்ற அரசே இல்லாமல் போகும் என்ற சூழல் ஏற்பட்டது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைக்கும் அளவுக்கு, தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மணிகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், வரலாறு பாடங்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இவற்றை படிப்பதற்கு இன்று ஆட்கள் இல்லை. தமிழ்... தமிழ்... என்று பேசுவதை காட்டிலும் செயல்படுத்திக் காட்டுவது சிறந்தது. தமிழைக் காப்பாற்றுவது உங்களின் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 'கொரியா வரை செல்லும் தமிழ் வேர்கள்' எனும் தலைப்பில் தமிழ் ஆய்வாளர் கண்ணன் பேசினார். உதவி பேராசிரியர் ஜெய்சிங் நன்றி கூறினார்.
தாயக்கட்டையின் வரலாறு
தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் பேசுகையில், ''நமது கலாசாரத்தில் விளையாட்டுப் பொருளாக இருந்தவை தாயக்கட்டைகள். யானைத்தந்தங்களால் செய்யப்பட்ட இவற்றை செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தாயக்கட்டை விளையாட்டு வாயிலாக, கணிதம் வெளிப்பட்டது. தாயக்கட்டையும், பல்லாங்குழி ஆட்டமும் பெண்களின் கணித அறிவை மேம்படுத்தின. ஒரு தாயக்கட்டையின் பின்னால் 2,600 ஆண்டு வரலாறு உள்ளது'' என்றார்.