/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கெரடி கோயில்' உருவான வரலாறு
/
'கெரடி கோயில்' உருவான வரலாறு
ADDED : டிச 04, 2025 08:17 AM
ஆ ங்கிலேயர் வருகைக்கு முன், ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் தற்காப்புக்காக, தேகப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் கற்பது, ஒரு பொதுவான பழக்கம். இப்பயிற்சிகளை கற்பித்தவர்கள் தனி சமூகத்தை சேர்ந்த கைச்சண்டை வல்லுநர்கள். அவர்கள் கிராமங்களில் குடியேறி, 'கெரடிகூடம்' (சிலம்பக்கூடம்) எனப்படும் பள்ளிகளை நடத்தி, இளைஞர்களுக்குப் போர்த்திறனை கற்பித்து வாழ்ந்தனர்.
மைசூர் சிக்கே ராஜன் ஆட்சிக்காலத்தில், இப்படிப்பட்ட சில பயிற்சியாளர் குடும்பங்கள், தெற்கே வந்து கோவையில் குடியேறினர். ஹாசனூர் வழியாக வந்தபோது, லட்சுமி நாராயணர், வேணுகோபாலர் விக்கிரகங்களைபெரிதும் விரும்பி, தங்களுடன் கொண்டு வந்தனர்.
கோவையின் செட்டித்தெருவில் குடியேறிய அவர்கள், அங்கே ஒரு புதிய கெரடிகூடம் அமைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினர். இதனருகே ஒரு சிறிய ஆலயம் கட்டி, தாங்கள் கொண்டு வந்த இரண்டு விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்தனர். இக்கட்டடத்துக்கு துணை நின்றவர் ஆனைமலை முனியக்குட்டி.
பின், கலசபாக்கம் ராமானுஜ ஐயர், அங்கே ஒரு தெலுங்கு பாடசாலையை தொடங்கினார். திருநாராயணபுரத்திலிருந்து வந்த வேங்கடாச்சாரியர் வாயிலாக, ஆலயத்தில் முறையான பிரதிஷ்டை நடைபெற்றது. அரசாங்க மானியங்களும் தானங்களும் கிடைத்ததால், ஆலயம் மேலும் வளர்ச்சி பெற்றது.
போர்பயிற்சி கூடத்தையும், அதன் பக்கத்து ஆலயத்தையும் சுற்றி உருவான இப்பகுதி, இதனால் 'கெரடி கோயில்' என்ற பெயரால், இன்றளவும் அழைக்கப்படுகிறது.

