/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்
ADDED : பிப் 13, 2026 05:20 AM

- நிருபர் குழு -:
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், நேற்று நான்காவது நாளாக தொடர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அரசு கலை கல்லுாரியில், வேலையை புறக்கணித்து கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், யு.ஜி.சி. நிர்ணயித்த, 57,800 ரூபாய் ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும், 12 மாத சம்பளம் வழங்க வேண்டும். பி.எப். மற்றும் இ.பி.எப். வழங்க வேண்டும்.
பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது, 25 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாணவர்களிடம் மனு வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று நான்காவது நாளாக பணியை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று கல்லுாரி மாணவர்களிடம் மனு வழங்கி நுாதன பேராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினர். அ.தி.மு.க., தொழிற்சங்க தலைவர் அமீது கவுரவ விரிவுரையாளர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பா.ஜ.,வினர் ஆதரவு உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை நேற்று பா.ஜ., உடுமலை மத்திய ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இம்மனுக்கள் குறித்து, கட்சி தலைமையின் பார்வைக்கு கொண்டு சென்று, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, பா.ஜ., நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

