sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னையில் நன்னெறி வேளாண்மை முறை: தோட்டக்கலைத்துறை அறிவுரை

/

தென்னையில் நன்னெறி வேளாண்மை முறை: தோட்டக்கலைத்துறை அறிவுரை

தென்னையில் நன்னெறி வேளாண்மை முறை: தோட்டக்கலைத்துறை அறிவுரை

தென்னையில் நன்னெறி வேளாண்மை முறை: தோட்டக்கலைத்துறை அறிவுரை


ADDED : அக் 21, 2025 08:10 PM

Google News

ADDED : அக் 21, 2025 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: 'நன்னெறி வேளாண்மை முறையில், தென்னையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு செய்ய முடியும்,' என, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

பொள்ளாச்சியில், தென்னை மரங்களை பல வகையான பூச்சிகளும், நோய் கிருமிகளும் தாக்கி வருகின்றன. இதன் விளைவாக 20 முதல் 50 சதவீதம் வரை பயிர் இழப்பு ஏற்படுகிறது.

இன்றைய நவீன வேளாண்மையில், குறைந்த எண்ணிக்கையிலான பயிர் வகைகள் சாகுபடி மற்றும் உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால், பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

பூச்சி நோய் தாக்குதலிலிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு, ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சானகொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.

இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண் மற்றும் தண்ணீர் பெரிய அளவில் மாசடைகின்றன. மண்ணில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிகின்றன.

உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது; தென்னந்தோப்புகளில் கேடுகள் செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

மேலும் மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்கு காரணமான தேனீக்கள், எறும்புகள் போன்ற பூச்சிகள் அழிக்கப்படுவதனால், மகரந்த சேர்க்கை சரிவர நடைபெறாமல் தேங்காய் காய்ப்பு குறைந்து வருகிறது.

எனவே பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கு, சுற்றுச்சூழலுக்கு நட்புள்ள நன்னெறி பயிர் பாதுகாப்பு முறைகளை, விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி கூறியதாவது:

தென்னை மரங்களின் தலைப்பாகத்தை தகுந்த இடைவெளியில் சுத்தம் செய்தல், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலால், பட்டுப்போன தென்னை மரங்களை வெட்டி அகற்றுதல் வாயிலாக காண்டாமிருக வண்டுகள், சிவப்புக் கூன்வண்டுகள் மற்றும் எலிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகளை பாதுகாத்தல். தென்னை மரங்களில் பாளைகள் வெளிவந்து பூக்கள் மலரத் தொடங்கியவுடன் தேனீக்கள், ஈக்கள், எறும்புகள், குளவிகள், கூன் வண்டுகள் அதிக அளவில் வருகின்றன.

இவை பூக்களில் சுரக்கும் தேன் மற்றும் மகரந்தங்களை உண்டு வாழ்கின்றன. இவைகள் வாயிலாக, தென்னை மரங்களில் மகரந்த சேர்க்கை சிறப்பாக நடைபெறுகிறது, காய்ப்பும் அதிகரிக்கிறது.

தேனீக்களுக்கு உணவாக தேவைப்படும் மகரந்தங்கள் மற்றும் பூந்தேன் ஆகிய வகைகளை, அதிக அளவில் உற்பத்தி செய்து தரக்கூடிய மலர் தாவரங்கள் தென்னந்தோப்புகளில் அதிக அளவில் வளர்க்க வேண்டும்.

இத்தகைய மலர் தாவரங்கள் இங்கு காணப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அதிக அளவிலான கலைக்கொல்லி மற்றும் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதாகும்.

இவைகள் தேனீக்கள் போன்ற நன்மை செய்யக்கூடிய பூச்சிகளின் நடமாட்டத்தை பெருமளவில் குறைக்கின்றன.

பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை தாக்குப்பிடிக்க கூடிய தென்னை ரகங்களை, தேர்வு செய்து நடவு செய்தல் வேண்டும். நல்ல உருண்டை வடிவம் கொண்ட தேங்காய்களில் ஈரியோப்பைட் சிலந்தி மற்றும் கோரைப் பூச்சி தாக்குதல்கள் மிகவும் குறைவாக காணப்படுகிறது.

உயிரியல் கட்டுப்பாடு தென்னை மரம் பல்லாண்டு பயிராகவும், உயரமான மரமாகவும் இருக்கின்ற காரணத்தினால், அதை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள் தான் சரியான தேர்வாகும்.

இந்தமுறைகளை கடைப்பிடித்த காரணத்தினால், கருந்தலை புழுக்கள் மற்றும் செதில் பூச்சிகள் இப்பொழுது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன.

பூச்சிகளை தாக்கி அழிக்கக்கூடிய, பூஞ்சாளங்கள் பூச்சிகளின் மேல் தோல் வழியாக நேரடியாக பூச்சிகளின் உடலுக்குள் சென்று அங்கு நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்து அதன் வாயிலாக பூச்சிகளைக் கொல்கின்றன.

காண்டாமிருக வண்டுகளை, பச்சைமஸ்கார்டைன் பூஞ்சாளத்தின் வாயிலாக வெற்றிகரமாக கட்டுப்படுத்தலாம்.

காண்டாமிருக வண்டுகளின் இனப்பெருக்கம் நடைபெறும் பெருங்குழிகளில், இந்த பூஞ்சாளத்தை தெளிப்பதன் வாயிலாக, 85 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

சிலந்திப்பூச்சிகளை ஹிர்சுட்டிலா தம்சாணி என்னும் பூஞ்சாளத்தை கொண்டு கட்டுப்படுத்தலாம். டிரைகோடெர்மா ஹார்சியானம் என்னும் பூஞ்சாளத்தை பயன்படுத்தி தென்னையில் அடித்தண்டு அழுகல் நோய் மற்றும் சாறு வடிதல் நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பூச்சி கட்டுப்பாடு

தென்னையை சீரழிக்கும் பல பூச்சிகளை தாக்கி அழிக்கக்கூடிய ஒட்டுண்ணிகள், இரை விளங்கிப் பூச்சிகள், குளவிகள், சிலந்திகள் ஆகியன ஏராளமாக உள்ளன.அவைகளை ஆய்வுக்கூடங்களில் இனப்பெருக்கம் செய்து, தென்னந்தோப்புகளில் விடுவதன் வாயிலாக, தென்னையில் பூச்சிக் கட்டுப்பாடு செய்திடலாம். கருந்தலை புழுக்களை தாக்கி அளிக்கக்கூடிய, கோனியாசிஸ் நெப்பான்டிடீஸ் மற்றும் பிரக்கான் பிரிவிகார்னிஷ் ஒட்டுண்ணிகளை தென்னந்தோப்புகளில் விட்டு கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்தலாம். அவ்வாறே அப்படோகிரைசா இரைவிழுங்கி மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகளை கொண்டு வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியும். வேப்பம் புண்ணாக்கு துாளுடன் மணலை கலந்து தென்னை மரத்தின் ஓலைகளின் இடுக்குகளில் இடுவதன் வாயிலாக காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தலாம். நைலான் வலைகளை ஈட்டி ஓலைகளின் அடிப்பகுதியில் கட்டி வைப்பதன் வாயிலாக, வண்டுகள் வலையில் மாட்டிக்கொண்டு விடுகின்றன, பயிர்கள் அவைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன. பெரமோன் இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்துவதன் மூலம் காண்டாமிருக வண்டுகள் மற்றும் சிவப்பு கூன்வண்டுகளை கவர்ந்திழுத்து அழித்து விட முடிகிறது.



உயிரின கழிவுகளின் மறுசுழற்சி

தென்னைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பயிரூட்டங்களான சாம்பல் சத்து, சுண்ணாம்பு சத்து மக்னீசியம் சத்து, போரான் சத்து, சிலிக்கான் சத்து சரியான அளவில் அளித்திட வேண்டும். இந்த சத்துக்கள் தென்னைக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன. தாவரக் கழிவுகள், மூடாக்கு பொருட்கள் ஆகிய கரிமம் பொருட்களை மறுசுழற்சி செய்து, மண்ணுக்கு இடுவதன் வாயிலாக மண்ணில் நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி விடுகின்றன. தென்னந்தோப்பு மண்ணில் காணப்படும் பேசிலஸ், சூடோமோனாஸ் ஆகிய நுண்ணுயிரிகள் மண்ணில் கரையாத வடிவத்தில் காணப்படும் மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் சிலிக்கான் சத்து ஆகியவைகளை கரைத்து, தென்னைகளுக்கு கிடைக்கச் செய்கின்றன.








      Dinamalar
      Follow us