/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சபரிமலை ரயில் திட்டத்தால் இடுக்கி வளர்ச்சி பெறும்
/
சபரிமலை ரயில் திட்டத்தால் இடுக்கி வளர்ச்சி பெறும்
சபரிமலை ரயில் திட்டத்தால் இடுக்கி வளர்ச்சி பெறும்
சபரிமலை ரயில் திட்டத்தால் இடுக்கி வளர்ச்சி பெறும்
ADDED : பிப் 07, 2026 05:48 AM
மூணாறு: அங்கமாலி- எருமேலி இடையே சபரி ரயில் திட்டத்திற்கு கேரள அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இடுக்கி மாவட்டம் பல்வேறு வகையில் வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள முக்கிய பகுதியான கோட்டயம் மாவட்டம் எருமேலிக்கு சபரி ரயில் திட்டம் 25 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது.
அங்கமாலியில் இருந்து காலடி, பெரம்பாவூர், ஓடக்காலி, கோதமங்கலம், மூவாற்றுபுழா, வாழக்குளம், தொடுபுழா, கரிங்குண்ணம், ராமபுரம், பரணங்கானம் பார்பாலா, செம்மலமற்றம், காஞ்சிரப்பள்ளி ரோடு வழியாக எருமேலிக்கு 111 கி.மீ., துாரம் எர்ணா குளம், இடுக்கி, கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களை இணைத்து ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக அங்கமாலியில் இருந்து 7 கி.மீ., தூரம் காலடி வரை பணிகள் நடந்த நிலையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், சபரி ரயில் திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டிய கேரள அரசு 50 சதவீதம் நிதி வழங்கவும் முன் வந்துள்ளது.
எதிர்பார்ப்பு இடுக்கி மாவட்டத்தில் சபரி ரயில் திட்டத்தில் 20 கி.மீ., துாரம் ரயில் பாதை செல்கிறது; தொடுபுழாவில் ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் முதன்முறையாக அமைக்கப்படும் ரயில் நிலையம் பல்வேறு வளர்ச்சிகளுக்கு வழி வகுக்கும். குறிப்பாக சுற்றுலா, ஏலம், தேயிலை, காபி, ரப்பர் உட்பட பணப்பயிர் வர்த்தகம், சரக்கு கையாளுதல் உட்பட பல்வேறு வளர்ச்சிகள் ஏற்படும்.
ஒரு நுாற்றாண்டுக்கு முன் இடுக்கி மாவட்டம் மூணாறில் தேயிலை உட்பட சரக்குகளை கையாள ஆங்கிலேயர்கள் ரயில் சேவையை பயன்படுத்தினர்.
1924ல் பெய்த கனமழையில் ரயில் பாதை, பாலம் ஆகியவை சீரமைக்க முடியாதபடி சேதமடைந்தன. அதனால் ரயில் சேவையை கைவிட்டனர். தற்போது நூற்றாண்டுக்கு பிறகு மாவட்டத்தில் ரயில் ஓசை கேட்பதற்கு வாய்ப்புகள் உருவாகி உள்ளதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

