/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமும் ஏறி இறங்கினால் முதுகெலும்பு அவ்வளவுதான்!
/
தினமும் ஏறி இறங்கினால் முதுகெலும்பு அவ்வளவுதான்!
ADDED : அக் 25, 2025 01:02 AM

கோவை: மாநகராட்சி, 20வது வார்டில் இந்திய உணவு கழகத்தின் (எப்.சி.ஐ.) குடோன், பாரத் பெட்ரோலியம் குடோன் அருகருகே அமைந்திருக்கின்றன. இவ்வழித்தடம், எப்.சி.ஐ. ரோடு என அழைக்கப்படுகிறது.
சத்தி ரோட்டில் இருந்து, அவிநாசி ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோட்டுக்குச் செல்வதற்கு இணைப்பு பாதையாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் அவிநாசி ரோட்டில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கும், இவ்வழியையே உபயோகிக்கின்றனர். கணபதி, கணபதி மாநகர், காந்தி மாநகர், ஹட்கோ காலனி, ஸ்ரீராம் நகர், காவலர் குடியிருப்பு, முருகன் நகர், முல்லை நகர், ஹோப்ஸ் காலேஜ், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால், நாளொன்றுக்கு 25 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. அதனால், முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இருக்கிறது.
ரோடும் வேகத்தடையும் இச்சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக இருந்தது. வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்ததால், அவதிப்பட்ட அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர் சித்ரா மற்றும் ம.தி.மு.க., நிர்வாகிகள் தியாகு, வெள்ளிங்கிரி உள்ளிட்டோர், கலெக்டர், மாநகராட்சி அலுவலகங்களில் மனுக்கள் கொடுத்தனர்.
இதன்பின், இந்திய உணவு கழகம் முன்வந்து, கான்கிரீட் ரோடு அமைத்தது. அச்சமயத்தில், சத்தி ரோட்டில் இருந்து குடோன் வரையிலான 1.5 கி.மீ., துாரத்தில் 12 இடங்களில் கான்கிரீட் கலவையால் வேகத்தடை அமைத்தது. சாலை விதிகளை கடைபிடிக்காமல், குவியலாக கலவையை கொட்டி, உயரமாக வேகத்தடை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஐ.ஆர்.சி., (இண்டியன் ரோடு காங்கிரஸ்) விதிமுறையை மீறி, வேகத்தடைக்கான அளவுகளை மீறி, 100 மீட்டருக்கு ஒரு வேகத்தடை என்கிற வீதத்தில், அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வேகத்தடையும் உயரமாக அமைத்திருப்பதால், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர், இவ்வழியில் தொடர்ந்து பயணித்தால், ஒவ்வொரு வேகத்தடையிலும் ஏறி இறங்கும்போதும் முதுகெலும்பு பாதிக்கும்.
கார்களில் செல்லும்போது, அதன் கீழ்ப்பாகம் வேகத்தடையில் உரசி, பழுதாகின்றன. முக்கியமாக, வேகத்தடையை அடையாளம் காண, கருப்பு - வெள்ளை பெயின்ட் பூசப்படவில்லை. இவ்வழித்தடத்தை இரவு நேரத்தில் பயன்படுத்துவோர், வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தை சந்திக்கின்றனர்.
வேகத்தடைகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாக அமைய வேண்டுமே தவிர, அதுவே பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. வேகத்தடைகளை முழுமையாக அகற்றுவதோடு, ரோட்டின் இருபுறமும் தெருவிளக்குகளுக்கு மின் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை, அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
'முழுமையாக அகற்ற முயற்சி'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''எப்.சி.ஐ. ரோட்டில் உள்ள வேகத்தடைகளால் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் கூறியதும், அதன் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தோம். வேகத்தடைகளை முழுமையாக அகற்ற, இந்திய உணவு கழக அதிகாரிகளிடம் மீண்டும் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
'எப்.சி.ஐ.க்கு
சொந்தமானது'
இந்திய உணவு கழகம் தரப்பில் விசாரித்தபோது, 'அந்த ரோடு எப்.சி.ஐ.,க்கு சொந்தமானது. பொதுமக்கள் நலன் கருதி, பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. குடோனுக்கு கனரக வாகனங்கள் அதிகமாக வரும். அவை வேகமாகச் சென்றால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வேகத்தடைகள் அமைக்கப்பட்டன' என்றனர்.

