/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு
/
இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு
ADDED : ஜன 06, 2025 01:11 AM
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 9,250 ரூபாய். தற்போது, கடந்த மாதத்தை விட இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு இளநீர் வரத்து மிக மிக குறைவாகவே உள்ளது.
அதேசமயம், அனைத்து பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவுவதால், இளநீரின் தேவை அதிகரித்துள்ளது.
தேவையை விட வரத்து குறைவாக உள்ளதால், இளநீருக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் இளநீரின் விலை உயரும். எனவே, இளநீர் அறுவடையை சில நாட்கள் ஒத்திவைத்து, நல்ல விலையை கேட்டு பெறவும். குறிப்பாக, தற்போது, குளிரான சீதோஷ்ண நிலை உள்ளதால், 45 நாட்கள் கழித்து, இளநீர் அறுவடை செய்யலாம். வியாபாரிகள் பல காரணங்களை சொல்லி குறைந்த விலைக்கு இளநீர் வாங்க முயற்சி செய்கின்றனர்.
கோடை காலத்தை கருத்தில் கொண்டு, குறைந்த விலைக்கு இளநீர் விற்க வேண்டாம். அனைத்து வட மாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
தேங்காய் விலை உச்சத்தில் இருப்பதால், நாட்டு இளநீர் உற்பத்தி செய்யும் விவசாயிகள், இளநீருக்கு விற்பனை செய்வது இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.