ADDED : ஏப் 02, 2025 07:46 PM

கார்த்திக்கேயன், கல்வி ஆர்வலர், பொள்ளாச்சி: அரசுப்பள்ளிகளில் தரமான கட்டடங்கள் கட்டித்தர வேண்டும். பழைய கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசினால், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். மாணவர்களின் வசதிக்காக மைதானங்கள் மேம்படுத்திக்கொடுத்தால், விளையாட்டு போட்டிகளில் அசத்த முடியும். நுாலகம், கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் அமைத்து தர வேண்டும். பள்ளி மாணவர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வசதிகளை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.
குசலவன், வியாபாரி, வால்பாறை: வால்பாறை பள்ளிக்கு, மாணவர்கள் அனைவருமே பல்வேறு எஸ்டேட் பகுதியில் இருந்து தான் வருகின்றனர். ஆனால் பள்ளியில் உள்ள கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் மாணவியர் கடுமையாக பாதிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நகராட்சி சார்பில் கழிப்பிடம் வசதி செய்துதர வேண்டும்.
ரவி, தொழிலாளி, கிணத்துக்கடவு: தனியாருக்கு நிகராக அரசு பள்ளிகள் கல்வியில் முன்னேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் பள்ளி சுற்றுப்புற தூய்மை, வகுப்பறை, கழிப்பிட வசதிகள் போன்றவைகள் கேள்விக்குறியாகி உள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள் தேவைக்கு தண்ணீர் வசதியும் இல்லை. மழை காலத்தில் வகுப்பு அறையில் மழைநீர் ஒழுகுகிறது. புனரமைப்பு பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்படுகிறது. இதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜ், மேலாண்மை குழு உறுப்பினர், உடுமலை: அரசுப்பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அதேபோல் மாணவியர் அதிகம் படிக்கும் பள்ளியில் அவர்களுக்கான நாப்கின் வழங்கும் இயந்திரம், எரியூட்டும் இயந்திர வசதிகளில்லை. இதனால், மாணவியர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அஜிதா பேகம், மேலாண்மை குழு உறுப்பினர், உடுமலை: நகரப்பகுதியில் அரசு பள்ளிகளில் துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவதால், பள்ளிகளில் ஒரு நேரம் மட்டுமே சுத்தம் செய்கின்றனர். குறைந்தபட்சம், இரண்டு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

