/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறனாய்வு தேர்வுகளில் மாணவர்களின் பங்கேற்பு உயர்வு
/
திறனாய்வு தேர்வுகளில் மாணவர்களின் பங்கேற்பு உயர்வு
திறனாய்வு தேர்வுகளில் மாணவர்களின் பங்கேற்பு உயர்வு
திறனாய்வு தேர்வுகளில் மாணவர்களின் பங்கேற்பு உயர்வு
ADDED : ஜன 16, 2026 05:17 AM
கோவை: தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.) தேர்வு மற்றும் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு, மாவட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசின் உதவித்தொகை திறனாய்வு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு என்.எம்.எம்.எஸ்.தேர்வுக்கு சுமார் 4,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 5,830 மாணவர்கள் விண்ணப்பித்தனர்; இதில் 5,659 பேர் தேர்வெழுதியுள்ளனர். அதேபோல், முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு இந்த ஆண்டு 3,050 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.
கல்வி அதிகாரிகள் கூறுகையில், மாணவர்கள் பொதுத்தேர்வு மற்றும் பருவத்தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், இது போன்ற திறனாய்வு தேர்வுகளிலும் பங்கேற்க தொடர் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு தேர்விற்கும் பள்ளி அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மாதிரி வினாத்தாள்கள் வாட்ஸ்-அப் குழுக்கள் வாயிலாக பகிரப்படுகின்றன. மேலும், விடுமுறை நாட்களிலும், மாணவர் பெற்றோர் அனுமதியுடன், ஆன்லைன் வாயிலாக பயிற்சிகளை வழங்க அறிவுறுத்தியுள்ளோம். இதனால், நடப்பு கல்வியாண்டில் திறனாய்வு தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

