கோவை ரயில் பயணிகள் எண்ணிக்கை...அதிகரிப்பு!: தினமும் ரூ.1.8 கோடி சராசரி வருவாய்
கோவை ரயில் பயணிகள் எண்ணிக்கை...அதிகரிப்பு!: தினமும் ரூ.1.8 கோடி சராசரி வருவாய்
UPDATED : ஆக 17, 2026 05:17 AM
ADDED : ஆக 16, 2026 08:11 PM

கோவை: கோவை ரயில்வே ஸ்டேஷனில் தினசரி பயணிகள் எண்ணிக்கை 65,000 ஆகவும், வருவாய் ரூ.1.8 கோடியாகவும் அதிகரித்து சேலம் கோட்டத்திலேயே முன்னிலை வகிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தின்கீழ் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட 94 ஸ்டேஷன்கள் உள்ளன. தற்போது, பயணிகள் வசதிக்காக போத்தனுார், வடகோவை ஸ்டேஷன்கள் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பையடுத்து, போத்தனுார் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்குவதும் அதிகரித்துள்ளது. சேலம் கோட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டும் ஸ்டேஷனாக கோவை உள்ளது.
2025-26 நிதியாண்டில் ரூ.368 கோடியே 8 லட்சத்து 90 ஆயிரத்து 990 வருவாய் ஈட்டி தெற்கு ரயில்வே பட்டியலில் நான்காம் இடம் பிடித்தது.
ஸ்டேஷனிற்கு 2 கோடியே 39 லட்சத்து 23 ஆயிரத்து 876 பேர் வந்து சென்றுள்ளனர். தினமும் கடந்து செல்லும் 140 ரயில்களில் 65,000 பேர் தற்போது கோவை வந்து செல்கின்றனர். பயணிகள், சரக்கு போக்குவரத்தும் அதிகம் கொண்டதாக கோவை உள்ளது.
இதனால், மாதம் ரூ.33 கோடி வரை வருவாய் ஈட்டி கோவை முன்னிலை வகித்து வருகிறது. சேலம் கோட்டமானது இந்தாண்டு ஜன., முதல் ஜூலை வரை பயணிகள் போக்குவரத்து வாயிலாக ரூ.509.25 கோடி, சரக்கு போக்குவரத்து வாயிலாக ரூ.209.19 கோடி ஈட்டியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை, காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
''கோவை ஸ்டேஷனுக்கு தினமும் 65,000 பேர் வந்து செல்கின்றனர். இவர்கள் வாயிலாக சராசரியாக ரூ.1 கோடியே 8 லட்சத்து, 67 ஆயிரம் வருவாய் தினமும் கிடைக்கிறது. ரூ.3 லட்சம் ரூபாய் சரக்கு போக்குவரத்து வாயிலாக கிடைக்கிறது.
கடந்த ஆண்டு 55,000-60,000 பேர் தினமும் ஸ்டேஷனை பயன்படுத்தினர். பயணிகள் அதிகரிப்பால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க போத்தனுார், வடகோவை ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்படுகின்றன.
கோவைக்கு அடுத்து இரண்டாவது முனையமாக மாற்றுவதற்கு போத்தனுார் ஸ்டேஷனில் ரூ.150 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன' என்கின்றனர், ரயில்வே அதிகாரிகள்.
