/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆபத்து வனவிலங்குகளுக்கு பாதுகாப்பில்லை
/
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆபத்து வனவிலங்குகளுக்கு பாதுகாப்பில்லை
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆபத்து வனவிலங்குகளுக்கு பாதுகாப்பில்லை
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆபத்து வனவிலங்குகளுக்கு பாதுகாப்பில்லை
ADDED : பிப் 17, 2026 05:28 AM

வால்பாறை: வால்பாறையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, ஆழியாறில் இருந்து வால்பாறை வரும் வழியில் சிங்கவால் குரங்குகள், வரையாடுகள், காட்டுமாடுகள் அதிகளவில் உள்ளன. இவைகளை பாதுகாக்கவும், அவற்றிற்கு தேவையான உணவு, குடிநீர் வசதியை வனத்துறையினர் செய்துள்ளனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பாதையில், வாகனத்தில் பயணம் செய்யும் சுற்றுலா பணியர் அதிகளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைளை திறந்தவெளியில் உணவுடன் வீசுகின்றனர். இந்த உணவுகளை பிளாஸ்டிக் கவர்களோடு, சிங்கவால் குரங்குகள், வரையாடுகள் உண்ணுவதால், உயிரிழப்பும் ஏற்படுகின்றன.
இது தவிர, புதுத்தோட்டம், வால்பாறை நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் நுழையும் சிங்கவால் குரங்குகள் மாறுபட்ட உணவை உட்கொள்வதாலும் சில நேரங்களில் உயிரிழக்கின்றன.
வனப்பகுதியை ஒட்டியுள்ள ரோட்டில் குரங்குகள் துள்ளி விளையாடும் போது, சாலையை கடக்கும் போதும் சில நேரங்களில் வாகனங்களில் அடிபடுகின்றன.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
வால்பாறையின் இயற்கையை பாதுகாக்கும் வகையில், அரசு அதிகாரிகள் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில், வால்பாறையில் பல்வேறு காரணங்களால், 68 சிங்கவால்குரங்குகள் உயிரிழந்துள்ளன. அரிய வகை வன விலங்குகளில் ஒன்றான சிங்கவால் குரங்குளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இருந்தாலும், மாறுபட்ட உணவை உட்கொள்ளவதாலும், வாகனங்களில் அடிபட்டும் சிங்கவால்குரங்குகள் உயிரிழந்துள்ளன. இயற்கைக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட பாலீத்தின் கவர் பயன்பாட்டை தடுக்க, வனத்துறை மற்றும் நகராட்சி இணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு, கூறினர்.

