/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் விளையாட்டை மேம்படுத்த புதுசு புதுசா!கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்
/
அரசு பள்ளிகளில் விளையாட்டை மேம்படுத்த புதுசு புதுசா!கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்
அரசு பள்ளிகளில் விளையாட்டை மேம்படுத்த புதுசு புதுசா!கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்
அரசு பள்ளிகளில் விளையாட்டை மேம்படுத்த புதுசு புதுசா!கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்
ADDED : ஜூலை 02, 2024 02:18 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், வழக்கமான விளையாட்டுகளுடன், புது விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு பயிற்சியளிக்க, அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இனி வரும் நாட்களில், பள்ளி மாணவ, மாணவியர் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியானது, குழு மற்றும் தடகளப் போட்டிகள் என, 14, 17 மற்றும் 19 வயது பிரிவின் கீழ் நடத்தப்படுகிறது.
முதற்கட்டமாக, குறு மைய அளவிலும், அதன்பின் மாவட்ட, மண்டல போட்டியைத் தொடர்ந்து, மாநில அளவிலான போட்டியும் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவோர், தேசிய போட்டியிலும் பங்கேற்பர்.
இதற்காக, பள்ளிகளில், விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் கண்டறியப்பட்டு உரிய பயிற்சி அளிக்கப்பட்டும் வருகிறது. அதன்படி, தினமும், கால்பந்து, வாலிபால், பேட்மிட்டன், கோ--கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
இருப்பினும், புதிய விளையாட்டுகளான ஜூடோ, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, நீச்சல், ஸ்குவாஷ், பீச் வாலிபால், பாக்சிங் போன்ற விளையாட்டிற்கு உரிய பயிற்சி இடம் மற்றும் உபகரணங்கள் இன்றி மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
பல அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சரிவர கிடைப்பதில்லை. போட்டிகளில் பங்கேற்கும் போது, 'ஸ்பான்சர்' வாயிலாக சீருடை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுஒரு புறமிருக்க, புதிய விளையாட்டிற்கு பயிற்சி மேற்கொள்ள கட்டமைப்பு வசதியும் கிடையாது. அரசு பள்ளி மாணவர்கள், புதிய விளையாட்டில் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக, ஒன்றிய அளவில், அதற்கான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கேற்ப, பயிற்றுநர்களையும் நியமிக்க வேண்டும். அவ்வாறு, இருந்தால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில், தேசிய அளவில் ஜொலிக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.