/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறவை காய்ச்சல் தடுக்க பண்ணைகளில் ஆய்வு
/
பறவை காய்ச்சல் தடுக்க பண்ணைகளில் ஆய்வு
ADDED : ஏப் 09, 2025 12:25 AM

மேட்டுப்பாளையம்; கோவையில் 1,200 கோழி பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர கோழிகள், வீடுகளில் வளர்க்கப்படும் வாத்துக்கள் ஆகியவைகளின் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகளில், பறவைக் காய்ச்சல் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னுார், துடியலுார் என மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவர்கள் பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும், பறவைக் காய்ச்சல் தொடர்பாக கோழிகள், வாத்துக்கள் போன்றவற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோவை மண்டல கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் கீதா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 1,200 கோழி பண்ணைகள் உள்ளன. அனைத்து பண்ணைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள், சுழற்சி முறையில் மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. இதுதவிர வீடுகளில் வளர்க்கப்படும் வாத்துக்கள் போன்றவற்றிலும் மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை, இருப்பினும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் களைந்த தண்ணீர் வைக்க பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அந்த தண்ணீர் வைக்கப்பட்டுள்ள வழியாக தான் பண்ணைக்கு வருவோர் மற்றும் கோழிப்பண்ணைக்கு வரும் வாகனங்கள் வரவேண்டும். வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி
நாசினி தெளிக்க வேண்டும். பண்ணைகளில் திடீரென கோழிகளின் இறப்பு அதிகம் ஏற்பட்டால் அல்லது கோழிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி எல்லையோர கிராமங்களை கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறுகையில், ''பறவைக் காய்ச்சல் சாதாரண சளி, காய்ச்சல் போன்று தான் இருக்கும். அதிக காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவை ஏற்படும். உணவுகளை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும்.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பறவைக் காய்ச்சல் இல்லை,'' என்றார்.

