/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தால் வருவாய் பெருகும்! விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுரை
/
தென்னையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தால் வருவாய் பெருகும்! விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுரை
தென்னையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தால் வருவாய் பெருகும்! விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுரை
தென்னையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தால் வருவாய் பெருகும்! விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுரை
ADDED : அக் 01, 2025 11:59 PM
பொள்ளாச்சி:'தென்னையில், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, பலஅடுக்கு ஊடுபயிர் சாகுபடி செய்து வருவாய் ஈட்டலாம்,' என, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு இருந்து இளநீர், தேங்காய் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வெள்ளை ஈ, வேர்வாடல் நோய் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.இந்நிலையில், தென்னையில் ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து வருவாய் ஈட்டலாம் என, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அறிவுறுத்தினார்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
தென்னையில் நிலவி வரும் பிரச்னைகளை களைந்து, மேலும் வருவாயினை பெருக்க தோட்டக்கலைத்துறை வாயிலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதுடன், அறிவுரைகளும் வழங்கப்படுகிறது.
தென்னந்தோப்பில் ஊடுபயிர் தேர்வு செய்யும் போது, தட்ப வெப்பநிலை, மண் மற்றும் விளை பொருட்கள் சந்தையினை கருத்தில் கொள்ள வேண்டும்.தென்னை மரங்களின் வயது, இடைவெளி, கிடைக்கும் சூரிய ஒளி, நீர்பாசன முறை, ஓலைகளின் நீளத்தையும் கருத்தில் கொண்டு பயிரினை தேர்வு செய்ய வேண்டும்.
வேர்ப்பகுதி (சல்லிவேராக இருப்பதால்) 20 -25 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பில் பரவி காணப்படும். மீதம் உள்ள 75 -80 சதவீதம் நிலப்பரப்பு ஊடுபயிர் சாகுபடிக்கு ஏற்றதாகும்.
ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள தென்னந்தோப்புகளில் மரவள்ளி, மஞ்சள், நிலக்கடலை, நறுமண பயிர்களான சித்தரத்தை, மூலிகை பயிர்கள் சாகுபடி செய்யலாம். மேலும், ஏற்றுமதி வணிக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஏழு ஆண்டுகளில் இருந்து, 20 ஆண்டுகள் உள்ள தென்னை தோப்புகளில், பயிறு வகைகள், பசுந்தாள் உரங்கள், தீவனப்பயிர்கள் பயிரிட்டு வருவாயை பெருக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் உள்ள தென்னந்தோப்புகளில், வாழை, மஞ்சள், கோகோ, சர்க்கரை வள்ளி கிழங்கு, ஜாதிக்காய், பாக்கு, மிளகு, இஞ்சி, அன்னாசி, கொய் மலர்களான அல்பினியா, ஹெலிகோனியா பயிரிடலாம்.
தென்னையில் பல அடுக்குப்பயிர்கள் வாயிலாக அதிகளவு வருவாயை பெற முடியும். தென்னை மர நிழலின் அடிப்படையில், இரண்டாம், மூன்றாம், நான்காம் அடுக்கு பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
பல அடுக்கு பயிரிடும் போது தனித்தன்மை சத்துக்கள், அனைத்து பயிர்களுக்கும் கிடைக்கும் வகையில் அமைவதால் மகசூல் அதிகரிக்கும். விஞ்ஞான அடிப்படையில் குறைந்த நிலப்பரப்பில் அதிக மகசூலை பெறுவதற்கு பல அடுக்கு பயிர் முறையானது மிகச்சிறந்ததாகும்.
தென்னந்தோப்பினுள் ஆட்டுப்பட்டி, மாட்டுப்பண்ணை அமைக்கலாம். இதன் வாயிலாக வருவாய் கிடைப்பதுடன், விவசாயத்துக்கு தேவையான தொழுஉரம் கிடைக்கும். மேலும், அதிக வருவாய் பெறுவதற்கான தகவல்களை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.