ADDED : மார் 20, 2026 05:24 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், அறிவுசார் மேம்பாட்டு பயிற்சி வகுப்பின் இரண்டாவது அமர்வு நடந்தது.
டி. நல்லிக்கவுண்டன்பாளையம் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு என்.எம்.எஸ். தேர்வின் அவசியம், போட்டித்தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், தேசிய மக்கள் பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் சசிக்குமார் பேசினார்.
இதில், 2025-26ம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட என்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி தர்ஷினி, கொண்டேகவுண்டன்பாளையம் பள்ளி மாணவி காவியா, ராமபட்டிணம் பள்ளி மாணவி கவிநயா ஆகியோருக்கு பரிசாக, நுால்களும், கேடயமும் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவியர், வழி நடத்திய தலைமையாசிரியர்கள், உதவி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பி.நாகூர் பள்ளியின் ஆசிரியர் ரஜினி நன்றி கூறினார். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
