/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மா மரங்களில் அதிக பூக்கள்; பராமரிப்பு பணி தீவிரம்
/
மா மரங்களில் அதிக பூக்கள்; பராமரிப்பு பணி தீவிரம்
ADDED : பிப் 15, 2025 06:46 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள மாந்தோப்புகளில், அதிகளவில் பூக்கள் பூத்துள்ளதால், கூடுதல் மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால், அதிகப்படியான இடங்களில், மா விவசாயத்தில், பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது, மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும் என்பதால், விவசாயிகள், மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர். அதேநேரம், பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், விளைச்சலும் அதிகரிக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
மாங்கன்றுகள் நட்டு, 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்சநிலையில் இருக்கும். இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன், இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால், பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக, அனுப்பப்படுகிறது.
பூக்கள் அதிகம் இருந்தாலும், அவை உதிராமல் இருந்தால்தான் அதிக மகசூல் பெற முடியும். குறைவான பராமரிப்பு, கூலி ஆட்கள் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்புக்கு, பராமரிப்புப் பணிகளில் ஆர்வம் செலுத்துகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.