கேரளா மாநிலம் வயநாடு, கண்ணுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் உள்ளது. மாவோயிஸ்ட்டுகளை 'தண்டர்போல்ட்' என்னும் சிறப்பு படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது தவிர தமிழகத்தில் 'கியூ' பிரிவு போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா மாநிலம் வயநாட்டில் போலீசாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டனர். அதே போல் கண்ணுார் பகுதியிலும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட்டுகள் காட்டுக்குள் தப்பி சென்றனர். கேரளா வனப்பகுதியில் உள்ள மாவோஸ்ட்டுகள், மாநில எல்லையோரங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள கேரள மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கோவையில் உள்ள தமிழக கேரள மாநில எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில், போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு, கண்காணித்தும் வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே கேரளா மாநில எல்லை பகுதியில் முள்ளி, கோபனாரி அமைந்துள்ளது. இங்குள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோபனாரி வனப்பகுதியையொட்டி உள்ள ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதுார், காலன்புதுார், செங்குட்டை, குட்டை புதுார், பட்டி சாலை, மேல்பாவியூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் உள்ள பழங்குடியினரிடம் 'கியூ' பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''பழங்குடியினரை சந்தித்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள நபர்களின் வருகை உள்ளதா என விசாரித்தோம். பழங்குடியினர்களின் குறைகளை கேட்டறிந்தோம்.
மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பழங்குடியின மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்க முயன்றால், சந்தித்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினோம்,'' என்றனர்.போலீசாரிடன் இணைந்து வனத்துறையினரும் வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.