ADDED : ஆக 31, 2026 08:02 PM
நீலாம்பூர்: திருப்பூர், ஈரோடு, சேலம் நோக்கி அவிநாசி ரோட்டில் செல்லும் வாகனங்கள், நீலாம்பூரில் பைபாஸில் இணைகின்றன. இங்குள்ள ஐ.டி. கல்லுாரி அரங்கில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இவர்களும், கல்லுாரி மாணவ மாணவியரும் பைபாசை கடக்க சிரமப்படுகின்றனர்.
எதிர் திசையில் உள்ள குடியிருப்புகளுக்கு, கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமெனில், வெகுதுாரம் சென்று சுரங்கப்பாதை வழியாக திரும்பி வர வேண்டியிருக்கிறது. அவ்வளவு துாரம் நடந்து செல்வது சிரமம் என்பதால், இரும்பு நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினர்.
ரூ.2.5 கோடியில் தற்போது இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. படிக்கட்டுகள் அதிகமாக இருப்பதால் மக்கள் பயன்படுத்துவார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் காந்திபுரத்தில் இருந்த இரும்பு நடை மேம்பாலத்தை பெரும்பாலானோர் பயன்படுத்தவில்லை. மேட்டுப்பாளையம் ரோட்டில் அவிநாசிலிங்கம் பல்கலை அருகிலும், பாலக்காடு ரோட்டில் குனியமுத்துாரில் உள்ள நடைமேம்பாலமும் பயன்பாடு இல்லாமல் இருக்கின்றன. இதன் காரணமாகவே அவிநாசி ரோட்டில் எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் வசதிடன் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அமைக்கவில்லை. நீலாம்பூரில் படிக்கட்டுகளுடன் அமைப்பதால் பயனுள்ளதாக இருக்குமா என்பது சந்தேகமே.
