கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வே கிடையாதா? அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வே கிடையாதா? அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : ஏப் 22, 2026 07:58 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்ச் முன்பாக, சர்வீஸ் ரோட்டோரத்தில் கழிவுநீர் வழிந்தோடுவதால் வாகன ஓட்டுநர்கள் பயணிக்க சிரமம் ஏற்படுகிறது.
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோடு வழியாக, தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த ரோட்டின் ஓரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட கால்வாயில் கழிவு நீர் செல்கிறது.
மேலும், பெரியார்நகரில் உள்ள குறிச்சி - குனியமுத்தூர் செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டி உள்ளது. இங்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்போது, மின் வெட்டு ஏற்பட்டால், குழாயில் அழுத்தம் ஏற்பட்டு, குடிநீர் பின்னோக்கி செல்லும். அப்போது, நீரானது சர்வீஸ் ரோட்டில் உள்ள கால்வாயில் செல்லும் கழிவுநீருடன் கலந்து ரோட்டில் வழிந்து ஓடுகிறது.
இதனால், இந்த ரோட்டில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையை சரி செய்ய தீர்வு இருந்தும், பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது.
மேலும், சர்வீஸ் ரோடு அகலப்படுத்தும் பணி எப்போது நடக்கும் என்பதும் தெரியவில்லை. பல ஆண்டுகளாக இதே நிலை தொடர்வதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
இந்த சர்வீஸ் ரோடு வழியாக தினந்தோறும் பயணிக்கிறோம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கால்வாயில் அடைப்பு மற்றும் குடிநீருடன் கழிவு நீர் கலந்து ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகிறோம்.
மேலும், மாலை நேரத்தில் இந்த ரோடு வழியாக பயணிக்கும் போது, சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இத்துடன் கொசு தொல்லையும் அதிகம் உள்ளது. எனவே, நீண்ட காலமாக இருக்கும் கால்வாய் பிரச்னை மற்றும் சர்வீஸ் ரோடு அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
