ADDED : ஏப் 01, 2026 04:38 AM

பொ ள்ளாச்சி சட்டசபை தொகுதியில், பொள்ளாச்சி நகராட்சி, 36 வார்டுகள், வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 27 கிராம ஊராட்சிகள், பெரியநெகமம் பேரூராட்சியை உள்ளடக்கி உள்ளது. தொகுதியில், நகர் மற்றும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கியமான மையப்பகுதியாக பொள்ளாச்சி உள்ளது.
இங்கு, தென்னை விவசாயம் பிரதானம். தேங்காய், இளநீர் விற்பனையாவதுடன், கொப்பரையும் உற்பத்தி செய்து காங்கேயம் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. மேலும், நீரா பானம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. தென்னை சார்ந்த தொழிலான தென்னை நார் உற்பத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும் செயல்படுகின்றன. இங்கு இருந்து மற்ற பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் நார் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
பொள்ளாச்சி தொகுதியில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன், ஆண்கள், 1,08,909, பெண்கள், 1,20,277, திருநங்கைகள், 44 என மொத்தம், 2,29,230 பேர் இருந்தனர். அதில், ஆப்சென்ட், 4,646, இடமாறுதல், 18,066, இறப்பு, 8,786, இரட்டை பதிவு, 1,352, மற்றவர்கள், 5 என மொத்தம், 32,855 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.
அதன்பின், கடந்தாண்டு, டிச. மாதம் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, ஆண்கள், 93,557, பெண்கள், 1,02,784 மற்றவர்கள்,34 என மொத்தம், 1,96,375 பேர் இருந்தனர்.
கடந்த பிப். மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம், 281 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஆண்கள், 96,061, பெண்கள்,1,05,919, மற்றவர்கள்,35 என மொத்தம், 2,02,015 பேர் உள்ளனர். இங்கு, கொங்கு வேளாள கவுண்டர், செட்டியார், முதலியார், பிராமணர், நாயக்கர், தேவர், அருந்ததியர் என அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர்.
பொள்ளாச்சியில், 1952, 1957, 1962ல் காங்., கட்சி வெற்றி பெற்றது. அதில்,1952, 57ம் ஆண்டுகளில், இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்களாக ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில், 1952ல் காங். கட்சி சார்பில் தொழிலதிபர் மகாலிங்கம், திருமூர்த்தியும், 1957ல் மகாலிங்கம், பொன்னையாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பின், ஒரு உறுப்பினராக தொகுதி மாற்றப்பட்டது. அதில், 1967, 1971, 1996 ஆகிய மூன்று முறை தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த, 1977, 1980, 1984, 1989, 1991, 2001, 2006, 2011, 2016, 2021 என, 10 முறை அ.தி.மு.க., வெற்றி பெற்று, பொள்ளாச்சியை தக்க வைத்துள்ளது. இதில், பொள்ளாச்சி ஜெயராமன், ஐந்து முறை போட்டியிட்டு, நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார்.
பொள்ளாச்சி சட்டசபை தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தாலும், லோக்சபா தேர்தலில் கடந்த, 2019 மற்றும் 2024ல் தி.மு.க. வெற்றி பெற்றது.
பொள்ளாச்சி தொகுதியில், ஆறாவது முறையாக பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. வேட்பாளர் நித்தியானந்தன், நா.த.க. வேட்பாளர் செந்தில்குமார், த.வெ.க. வேட்பாளர் ராமநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கொ.ம.தே.க. 2011ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியோடும், 2016ம் ஆண்டு தனித்து நின்றும் வெற்றி வாய்ப்பு பெறவில்லை. இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கொ.ம.தே.க. இத்தொகுதியை பெற்றுள்ளது. பொள்ளாச்சி தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கினாலும் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க. தலைமை, கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இம்முறை நான்கு முனை போட்டி உள்ளதால், பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்று கோட்டையை தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது தி.மு.க. சாதனை படைக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
