/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடை அகற்றக்கோரி மாணவர்கள் மனு
/
மதுக்கடை அகற்றக்கோரி மாணவர்கள் மனு
ADDED : ஆக 30, 2011 12:27 AM
கோவை : 'மதுக்கடையை அகற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பள்ளி மாணவ, மாணவியர், நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.கோவை கணபதி ராஜ வீதி குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டரிடம் கொடுத்த மனு விவரம்:எங்கள் பள்ளி வலதுபுற சுற்றுச்சுவர் ஒட்டி டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
மது குடிக்க வருவோர், பள்ளி முன் நின்றபடி தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர். மது பாட்டில்களை பள்ளியினுள் வீசுகின்றனர்; காலி பாட்டில்களை பள்ளி கேட் முன் உடைக்கின்றனர்.பள்ளி கேட் முன் மது குடிப்பது, சிறுநீர் கழிப்பது, போதையில் விழுந்து கிடப்பது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகி விட்டன. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இந்த மதுக்கடை உள்ளது. இது பற்றி பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.மதுக்கடை இங்கிருப்பதால், மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் பல தொல்லைகளுக்கும் ஆளாகின்றனர். மது குடித்து விட்டு, மாணவியரை கேலி, கிண்டல் செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. இவ்வளவுக்கும் காரணமான மதுக்கடையை, அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர். மாணவர்களுடன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களும் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டரிடம் தரப்பட்ட மனுவில், பெற்றோர், ஆசிரியர் பலரும் கையெழுத்திட்டிருந்தனர்.

