ADDED : ஜூன் 22, 2026 09:51 PM

கோவை: கே.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் சார்பில் 'கே.பி.ஆர்., லெகஸி விருதுகள் 2026' விழாவினை நடத்தியது. கே.பி.ஆர்., குழுமத்தின் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவ ராயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், ''இந்தியா 21ம் நுாற்றாண்டில் உலகை வழிநடத்தும் வல்லரசாக உயர்வது உறுதி. அதற்கான அடித்தளம் கல்வி, ஒழுக்கம், புதுமை மற்றும் இளைஞர்களின் ஆற்றலே,'' என்றார்.
விழாவில் வளர்ந்து வரும் கல்வியாளர், புகழ்பெற்ற பேராசிரியர், சிறந்த ஆராய்ச்சியாளர், நட்சத்திர முன்னாள் மாணவர், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட 5 பிரிவுகளில் இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
அமெட் பல்கலையின் துணைவேந்தர் ராஜேந்திரன் வெங்கடாசலத்திற்க்கு, துறைசார் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய மகத்தான மற்றும் நீடித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உயரிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
