ADDED : ஜன 28, 2025 06:31 AM
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே யானை தாக்கி மளிகை வியாபாரி கொல்லப்பட்டதை தொடர்ந்து, கும்கி யானைகளை வனத்துறையினர் கோவை கொண்டு வந்தனர்.
துடியலூர் அருகே உள்ள தாளியூரில் மளிகை வியாபாரி நடராஜ், 69, வாக்கிங் சென்றார். அப்போது புதருக்குள் இருந்து வந்த காட்டு யானை தாக்கி, அதே இடத்தில் நடராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காட்டு யானைகளின் வரவை கட்டுப்படுத்த, கோவை வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட அதிகாரிகள், விவசாயிகளை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர்.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து முத்து, சுயம்பு என்ற கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு, பன்னிமடை அருகே உள்ள வரப்பாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இரவு நேரத்தில் காட்டு யானைகளின் வரவை கட்டுப்படுத்த, கும்கி யானைகள் பணியில் ஈடுபடுத்தப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

