/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர் சம்பள பேச்சு தோல்வியில் முடிந்தது
/
தொழிலாளர் சம்பள பேச்சு தோல்வியில் முடிந்தது
ADDED : மார் 13, 2026 05:57 AM

வால்பாறை: சிறுதேயிலை தோட்ட நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான நான்காம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
வால்பாறையில் உள்ள சிறு தேயிலை தோட்ட நிறுவனங்களில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 481.54 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், சிறு தேயிலை தேட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 427 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சிறுதேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக நடந்த மூன்று கட்ட பேச்சு வார்த்தையில், சில எஸ்டேட்கள் ஒப்பந்தப்படி கூலி வழங்க ஒப்புக்கொண்டனர்.
மீதமுள்ள எஸ்டேட் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக நான்காவது கட்ட பேச்சு வார்த்தை கோவை தொழிலாளர் துறை கூடுதல் ஆணையாளர் சாந்தி முன்னிலையில் நடந்தது. இதில், கொங்குநாடு, அணலி எஸ்டேட் உள்ளிட்ட தோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கத்தின் சார்பில், அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் அமீது, வினோத்(எல்.பி.எப்.,) மோகன்(ஏ.ஐ.டி.யு.சி.,), உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்தரப்பு பேச்சு வார்த்தையில், 470 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி, 481.84 ரூபாய் வழங்க வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால், நான்காம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்டமாக, 23ம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும், என, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் தெரிவித்தார்.

