/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்சிமுனையில் அடிப்படை வசதியில்லை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
காட்சிமுனையில் அடிப்படை வசதியில்லை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
காட்சிமுனையில் அடிப்படை வசதியில்லை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
காட்சிமுனையில் அடிப்படை வசதியில்லை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : ஜூலை 21, 2025 10:01 PM

வால்பாறை; நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனையில் அடிப்படை வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
கவியருவி, அட்டகட்டி வியூபாயின்ட், ஆர்கிட்டோரியம், டைகர்வேலி, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கவர்க்கல்வியூ பாயின்ட், நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.
இந்த இடங்களை சுற்றிபார்க்க வனத்துறை சார்பில், 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
வால்பாறை நகரிலிருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனைப்பகுதிக்கு சுற்றுலா பயணியர் செல்ல, வனத்துறை சார்பில் நபருக்கு, 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், சுற்றுலா பயணியர் அதிருப்தியடைகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
பருவமழை பெய்யும் நிலையில், தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளதால், வார விடுமுறையில் வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் கட்டணம் வசூலித்தாலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
குறிப்பாக, வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி காட்சி முனையில் சுற்றுலா பயணியர் நடந்து செல்லும் ரோடு சீரமைக்கப்படவில்லை. கார் பார்க்கிங், கழிப்பிட வசதிகள் செய்துதரப்படவில்லை.
கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் வனத்துறையினர், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில், கரடு, முரடான ரோட்டை சீரமைத்து, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.