/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி ரோட்டில் வளைந்த வடிகால் இழப்பீடு வழங்கியும் நிலம் கையகப்படுத்தவில்லை
/
அவிநாசி ரோட்டில் வளைந்த வடிகால் இழப்பீடு வழங்கியும் நிலம் கையகப்படுத்தவில்லை
அவிநாசி ரோட்டில் வளைந்த வடிகால் இழப்பீடு வழங்கியும் நிலம் கையகப்படுத்தவில்லை
அவிநாசி ரோட்டில் வளைந்த வடிகால் இழப்பீடு வழங்கியும் நிலம் கையகப்படுத்தவில்லை
ADDED : மார் 21, 2026 06:43 AM

கோவை: கோவை அவிநாசி ரோட்டில், மேம்பால பணியில் இழப்பீடு வழங்கிய பின்பும் நிலத்தை கையகப்படுத்தாமல், மழை நீர் வடிகால் வளைத்து கட்டப்படுகிறது.
கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்தாண்டு அக். மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மழை நீர் வடிகால் கட்டுவது, ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் 'சிசி டிவி' கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட சில வேலைகள் நிலுவையில் இருக்கின்றன.
நிலுவை பணிகளை ஒரு மாதத்துக்குள் முடித்து விடுவோமென, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் உறுதி கூறியிருந்தனர். ஐந்து மாதமாகியும் வேலை முடியவில்லை. விடுபட்ட இடங்களில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது.
பீளமேடு பத்மாவதியம்மாள் கல்யாண மண்டபம் எதிரே தற்போது வடிகால் கட்டப்படுகிறது. அவ்விடத்தில், 100 அடி நீளம், 4-5 அடி அகலத்துக்கு நிலம் கையகப்படுத்த, நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது.
அப்பகுதியை அளவீடு செய்து, நெடுஞ்சாலைத்துறையினர் குறியீடு செய்திருக்க வேண்டும்; நிலத்தை கையகப்படுத்தியிருக்க வேண்டும். நிலத்தை கையகப்படுத்தாமல், வடிகால் கட்டப்படுகிறது; இப்பகுதியில் மட்டும் வடிகால் வளைந்து செல்கிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனியிடம் கேட்டதற்கு, ''அப்பகுதியில் உயர்மட்ட நடைமேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தினோம். மெட்ரோ ரயில் திட்டத்தில் அப்பகுதியில் ஸ்டேஷன் வருவதாக கூறியதால், நடைமேம்பாலம் கட்டவில்லை. இரும்பு தடுப்பை அகற்ற நில உரிமையாளரிடம் கூறியுள்ளோம். அவ்விடத்தை நிலத்தை கையகப்படுத்தி, நடைபாதை ஏற்படுத்தப்படும்,'' என்றார்.
வளைந்து செல்லாமல் நேராக மழை நீர் வடிகால் கட்டி, அதன் மீது நடைபாதை ஏற்படுத்தினால் மட்டுமே சரியானதாக இருக்கும். இவ்விஷயத்தில், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நெடுஞ்சாலைத்துறையினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. ஏனெனில், அரசிடம் இருந்து இழப்பீடு தொகை கொடுத்த பிறகும் நிலத்தை கையகப்படுத்தாமல் இருப்பது அதிகாரிகளின் தவறு. நில உரிமையாளரும் இழப்பீடு பெற்றுக் கொண்டு, இடத்தைக் கொடுக்காமல் இருப்பதும் தவறு. வடிகால் கட்டும் பணியை நிறுத்தி, வளைவு வராமல் நேராக கட்ட, நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

