ADDED : மார் 14, 2026 06:23 AM

சின்னதடாகம்... வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், பல ஓட்டல்கள், தற்காலிகமாக மூடப்படுகின்றன அல்லது உணவுப் பதார்த்தங்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இதனால், வாழை இலை விநியோகிக்கும் விவசாயிகளும் பாதிக்கப்பட் டுள்ளனர்.
முன்னோடி விவசாயி பிரபு கூறியதாவது:
நுாறு இலைகள் கொண்ட ஒரு கட்டுக்கு வியாபாரிகள், ரூ.450 தருகின்றனர். ஆண்டு முழுவதும் ஒரே விலை என்ற ரீதியில் வியாபாரிகளுக்கு அளித்து வருகிறோம். தற்போது வணிக காஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறையால், பல ஓட்டல்கள் மூடியதால், 10 நாட்களாக வாழை இலையை, வியாபாரிகள் தோட்டங்களுக்கு வந்து அறுத்து செல்வது வெகுவாக குறைந்துவிட்டது. வாழை இலை முற்றினாலோ அல்லது காற்றடித்து கிழிந்து போனாலும் விவசாயிகளுக்கு தான் நஷ்டம்.
நேரடியாக நாமே சென்று மார்க்கெட்டுகளில் விற்கலாம் என்றால், தற்போது உள்ள கடினமான சூழலில், 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100 அல்லது ரூ.200 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது.
இதனால், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன தடாகம் முதல் செல்வபுரம் வரை சுமார் 500 முதல் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இலை வாழை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

