/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகல் நேரத்தில் முகாமிட்ட சிறுத்தை
/
பகல் நேரத்தில் முகாமிட்ட சிறுத்தை
ADDED : டிச 13, 2025 07:47 AM

வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில், சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் பச்சமலை, வேவர்லி, அய்யர்பாடி ஆகிய மூன்று இடங்களில் மூன்று குழந்தைகளை சிறுத்தைகள் கடித்து கொன்றன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. கடந்த வாரம் தேயிலை எஸ்டேட்டில் மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்றது.
நேற்று காலை நடுமலை எஸ்டேட் ஐந்தாம் நெம்பர் தேயிலை காட்டில், சிறுத்தை நோட்டமிடுவதை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் கண்டனர். அதை போட்டோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.
பகல் நேரத்தில் சிறுத்தை தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே பகுதியில் மூன்று வயது சிறுவனை சிறுத்தை கடித்து கொன்றது. இந்நிலையில் அதே எஸ்டேட்டில் மீண்டும் சிறுத்தை நடமாடுவதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாகவே நடுமலை எஸ்டேட்டில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் எஸ்டேட்டில் சிறுத்தை முகாமிடுவதால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
மாலை நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வருவதால் குழந்தைகள் நிம்மதியாக வெளியில் விளையாடக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே, நடுமலை எஸ்டேட் பகுதியில் உலாவும் சிறுத்தையால் மீண்டும் உயிர்பலி ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

