ADDED : ஏப் 07, 2026 11:26 PM
காரமடை: காரமடை அருகே ஒன்னிப்பாளையத்தில், கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வருகிறது.
காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்டது ஒன்னிப்பாளையம் கிராமம். இந்த பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக ஊர் மக்கள் வனத்துறையினருக்கு அண்மையில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா கடந்த 2ம் தேதி பொருத்தப்பட்டது. மேலும் சிறுத்தையை பிடிக்க உயர் அலுவலர்களின் உத்தரவுப்படி, கூண்டும் வைக்கப்பட்டது.
இதனிடையே, கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வருகிறது.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தோட்டத்து வீடுகளில் வெளியே சமவெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும், என வனத்துறையினர் இப்பகுதி மக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
--------
