ADDED : ஜூலை 08, 2026 07:40 AM
மருத்துவ படிப்புகளில் சேர சான்றிதழ்கள் வேண்டுமா? திருப்பூர்: முன்னாள் படை வீரர்களை சார்ந்தோர், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, முன்னாள் படை வீரர் நலத்துறை வாயிலாக, சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 2026 - 27ம் கல்வியாண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு, முன்னாள் படை வீரர் நல அலுவலக உதவி இயக்குனர் அலுவலகத்தில், சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது.
முன்னாள் படைவீரர், விதவை அடையாள சான்று, படை விலகல் சான்று, எஸ்.எஸ்.சி. அதிகாரிகளுக்கான விடுப்பு ஆணை, பிளஸ் 2 மதிப்பெண் சான்று பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலக்கை அடைய உதவுவீர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு திருப்பூர்: தமிழக பட்ஜெட் வாயிலாக, திருப்பூருக்கு உரிய காலத்தில் தேவையான கொள்கை ஆதரவு வழங்கினால், ஏற்றுமதியை கணிசமாக உயர்த்தி, லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும்.உலகளாவிய ஜவுளி உற்பத்தி துறையில் முன்னணியில் உள்ள தமிழகத்தின் நிலை மேலும் வலுவாகும்.
2030ல் ஏற்றுமதி வர்த்தகத்தை ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் இலக்குடன் இயங்கி வரும் ஏற்றுமதியாளர்களின் லட்சியத்தை நிறைவேற்ற, தமிழக அரசு 2026-27 பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்கிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்.
சுற்றுலா பயணிகளை 'சுற்ற விடும்' கபாலி வால்பாறை: வால்பாறை செல்லும் சுற்றுலா பயணியர், கேரள மாநிலம் சாலக்குடி வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கும் சென்று வருகின்றனர். அருவிக்கு செல்லும் ரோட்டில், கடந்த சில மாதங்களாக 'கபாலி' என்று பெயரிடப்பட்ட யானை நடமாடுகிறது. பகல், இரவு நேரத்தில், ரோட்டில் நடமாடுவதால் சுற்றுலா பயணியர் பீதியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் காலை அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்ட 'கபாலி' யானை ரோட்டை வழிமறித்து நின்றது. இதனால், சிறிது நேரம் வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின், யானை ஒதுங்கி நின்றதால், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வால்பாறை: புதுமார்க்கெட் பகுதியில் பெரும்பாலான கடைகளில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் உள்ளனர். இந்நிலையில், நகராட்சி கமிஷனர் குமரன் தலைமையில், புதுமார்க்கெட் பகுதியில் வாடகை செலுத்தாத, 10 கடைகளை பூட்டி, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'முறைப்படி நோட்டீஸ் வழங்கியும் செலுத்தாததால் அந்த கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. பிற கடைகளும் நிலுவைத்தொகையை செலுத்தாவிட்டால், 'சீல்' வைக்கப்படும்' என்றனர்.
கேரளத்துக்கு தண்ணீரை நிறுத்த வலியுறுத்தல் பொள்ளாச்சி: தமிழக - கேரளம் மாநில ஒப்பந்தப்படி இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்படும் வரை அக்., 1ம் தேதியில் இருந்து ஜன., 31ம் தேதி வரை நீராறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், அணை கட்டி முடித்து பல ஆண்டுகளான பின்பும், இன்னும் கேரளாவுக்கு நீர் திறந்து விடும் இந்த நடைமுறை தொடர்கிறது.
இந்தாண்டு தமிழகத்தில் பருவமழை குறைவாக உள்ளதால், குடிநீர் முதல் பாசனம் வரை அனைத்துக்கும் நீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, ஒப்பந்தப்படி இந்தாண்டு முதல், நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு திறந்து விடும் நடைமுறையை நிறுத்த வேண்டும். அக்கால கட்டத்தில் வரும் நீரை, பி.ஏ.பி., திட்ட அணைகளுக்கு திருப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள், நேற்று நடந்த ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பால் கேன்கள் சுத்தமா அமைச்சர் திடீர் ஆய்வு பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பொங்காளியூரில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் கொள்முதல் மையத்தில், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, பாலின் தரம் பரிசோதனை செய்யப்படும் முறை, பால் கொள்முதல் செய்து சேகரிக்கும் கேன்களின் சுகாதாரம் குறித்து நேற்று ஆய்வு செய்தார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'மக்களுக்கு ஆவின் பால் முறையாக கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. குறைபாடுகள், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தெரிவித்துள்ளனர். முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
