/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன்னீஸ்வரர் தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம்
/
மன்னீஸ்வரர் தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம்
ADDED : டிச 16, 2024 09:39 PM
அன்னுார்; தேர்த்திருவிழா குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் 25ம் ஆண்டு தேர்த்திருவிழா வருகிற ஜன., 3ம் தேதி துவங்கி, 13ஆம் தேதி நிறைவடைகிறது. தேரோட்டம் 10ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற அமைதி குழு கூட்டம் அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தாசில்தார் குமரி ஆனந்தன் தலைமை வகித்தார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், செயல் அலுவலர் சிவசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேரோட்டத்தின் போது மின் தடை ஏற்படும் பகுதி, நேரம் ஆகியவை குறித்து முன்னதாகவே பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தேரோடும் வீதிகளை ஒட்டி தற்காலிக கழிப்பறை அமைக்க வேண்டும். வார சந்தை வளாகத்தில் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி இணைந்து தேரோடும் வீதிகளில் உள்ள பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.
ஜெனரேட்டர் வசதியுடன் 'சிசிடிவி' கேமராக்கள் இயங்கும்படி செய்ய வேண்டும். அன்னுார் நகரில் உள்ள டிவைடர்களை தேர் திருவிழா நடைபெறும் 11 நாட்களுக்கு மட்டும் அகற்ற வேண்டும். கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்ய வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
துணை தாசில்தார் ரேவதி, வருவாய் ஆய்வாளர் பானுமதி, போலீஸ் எஸ்.ஐ., ராஜேந்திரன், பேரூராட்சி மேற்பார்வையாளர் பிரதீப் குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், மின்வாரியம், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, சுகாதாரத்துறை என அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

