/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் மகசூலை அதிகரிக்கும் நுண்ணுாட்டசத்து!
/
தென்னையில் மகசூலை அதிகரிக்கும் நுண்ணுாட்டசத்து!
ADDED : பிப் 28, 2026 06:58 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கோவை வேளாண் மாணவர்கள், விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதியாண்டு மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம், பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் வளர்ச்சி ஊக்கிகள் குறித்து செயல்விளக்கம், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், ஜமீன் ஊத்துக்குளி அருகே போடிபாளையம் பாக்கு தோட்டத்தில் மண்ணில் இருக்கும் பொட்டாஷ் சத்துக்களை பயிருக்கு எடுத்துக்கொடுக்கும் பொட்டாஷ் பாக்டீரியா குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பயிர் வளர்ச்சிக்கு உதவும் இதர நுண்ணுயிர்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
* ஆழியாறு பகுதியில் தங்கி மாணவியர், கிராமப்புற விவசாய பணி அனுபவங்களை கேட்டறிந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் நெகிழி இல்லாத சூழலை உருவாக்கும் நோக்கில், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
ரோட்டோரங்களில் சுற்றுலா பயணியரால் வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களை மாணவர்கள் சேகரித்தனர். வனவிலங்குகளில் பாதுகாப்பை கருதி நெகிழி இல்லா மண்டலமாக மாற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
* ஆழியாறு பகுதியில் தங்கியுள்ள மாணவியர், தென்னை மர ஆரோக்கியம் மேம்பட தமிழ்நாடு வேளாண் பல்கலை நுண்ணுாட்ட சத்து கலவை பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
தென்னை மரங்களில் மஞ்சள் இலைகள், வளர்ச்சி குறைவு, தண்டு மெலிதல், மகசூல் குறைதல் போன்றவை பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இதை சரி செய்ய, வேளாண் பல்கலை பரிந்துரைக்கும் நுண்ணுாட்டச்சத்து கலவை மிகவும் பயனாக உள்ளது என விளக்கப்பட்டது.
ஒரு தென்னை மரத்துக்கு ஆண்டுக்கு ஒரு கிலோ அளவுக்கு நுண்ணுாட்டச்சத்து கலவை பயன்படுத்த வேண்டும்.
இதை, 10 பங்கு தொழுஉரத்துடன் கலந்து ஒரு மாதம் ஊற வைத்து மரத்தின் வேர்பகுதியில் இட வேண்டும். மேலும், தேவையானால் மண்ணில் கலந்து மண் நனைத்தல் முறையிலும் பயன்படுத்தலாம்.
இந்த கலவையில் உள்ள துத்தநாகம், போரான், இரும்பு, மாங்கனீஸ், செம்பு, மாலிப்டினம் போன்ற சிறு ஊட்டச்சத்துக்கள், இலலைகள் பச்சையாக வளரவும், பூ மற்றும் காய் அமைப்பு மேம்பட உதவுகிறது.
மேலும், இந்த நுண்ணுாட்டச்சத்து கலவையை நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், உரங்கள் மற்றும் தென்னை டானிக் சேர்ந்து பயன்படுத்தினால், தென்னையில் மகசூல் கணிசமாக அதிகரிக்கும், என, மாணவியர் விளக்கமளித்தனர்.

