ADDED : நவ 12, 2024 05:48 AM
தொண்டாமுத்தூர் ; தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர், பால் விலையை உயர்த்த வலியுறுத்தி, பச்சாபாளையம், ஆவின் பால் பண்ணை வளாகத்தின் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கறவை மாடுகளுக்கு வழங்கும் தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால், ஆவின் நிர்வாகம், பசு மாட்டு பாலுக்கு லிட்டருக்கு, 5 ரூபாயும், எருமை மாட்டு பாலுக்கு, 10 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை, 5 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும். மாட்டு தீவனங்களை அரசே உற்பத்தி செய்து, பாதி விலைக்கு விற்க வேண்டும்.
கறவை மாடுகளுக்கு, இலவச தடுப்பூசி மற்றும் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தங்களது கோரிக்கைகளை ஆவின் நிர்வாகம் ஏற்காவிட்டால், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுவோம் எனவும், தெரிவித்தனர்.
இதில், மாவட்ட தலைவர் காளப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
