/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறு பாசனங்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
/
சிறு பாசனங்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 14, 2025 11:08 PM

சூலுார்; சூலுார் வட்டாரத்தில் சிறு பாசனங்கள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறு பாசனங்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, ஏழாவது கணக்கெடுப்பு புள்ளியியல் துறை வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. சூலுார் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இப்பணி நடந்து வருகிறது. கிராம பகுதிகளில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், நகர பகுதிகளில் பேரூராட்சி, நகராட்சி அலுவலர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விவசாயிகளை அணுகி, புதிதாக அமைக்கப்பட்ட கிணறு, ஆழ்துளை கிணறு, ஏற்கனவே உள்ள கிணறுகள், அவற்றின் தற்போதைய நிலை உள்பட, 34 வகையான விபரங்களை சேகரித்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தற்போது பயன்பாட்டில் இல்லை எனில், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதா, மோட்டார் வசதி இல்லையா, கழிவு நீர் கலக்கிறதா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளனவா என,விசாரித்து தகவல்கள் பெறப்படுகின்றன. விபரங்கள் உடனுக்குடன் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு பகிரப்படுகிறது. கணக்கெடுப்பு பணி முடிந்தபின் அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீர் மேலாண்மை பணிகள் குறித்து திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன.
சிறு பாசனம் தொடர்பான முழு தகவல்களை, களப்பணியாளர்களிடம் விவசாயிகள் தெரிவித்து, முழு ஒத்துழைப்பு அளிக்க அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.