ADDED : மார் 19, 2026 04:23 AM
சூலுார்: நீலம்பூர் அருகே காணாமல் போன, மூன்று மாணவர்களை போலீசார் திருச்சூரில் மீட்டனர்.
நீலம்பூர் அடுத்த தென்னம்பாளையத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றனர். மாலை பெற்றோர் மகன்களை அழைத்து வர பள்ளிக்கு சென்றபோது, மூவரும் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நீலம்பூர் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், மாணவர்கள் செல்போன் வைத்திருந்தால், அதை டிரேஸ் செய்த போலீசார், மாணவர்கள் மூவரும் கேரள மாநிலம் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் இருப்பது தெரிந்தது. கேரள ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். மூன்று மாணவர்களை ரயில்வே போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பெற்றோருடன் அங்கு சென்ற நீலம்பூர் போலீசார், மாணவர்கள் மூவரையும் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
