/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் சேவை அதிகரிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
/
ரயில் சேவை அதிகரிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 16, 2026 07:15 AM
கிணத்துக்கடவு: ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் தெற்கு ரயில்வே மேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
போத்தனூர் - திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்ட கோவை --- ராமேஸ்வரம் மற்றும் கோவை --- மதுரை வழியாக இயங்கப்பட்ட ரயில் சேவையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
கோவை, போத்தனூர் மற்றும் கிணத்துக்கடவு பகுதி ரயில் பயணியர், திருச்செந்தூர் செல்ல நேரடி ரயில் சேவை கொண்டு வர வேண்டும். கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் சில முக்கிய ரயில்கள், போத்தனூர் மற்றும் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி வரை உள்ள, 21 கி.மீ., ரயில் பாதை, சேலம், பாலக்காடு, மதுரை என, மூன்று ரயில்வே கோட்டங்களின் நிர்வாகங்களில் உள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் ஒரு ரயிலை இயக்க, மூன்று கோட்டங்களில் கூட்டங்களில் ஒப்புதல் பெறவேண்டிய நிலை உள்ளது.
எனவே, இந்த சிக்கலை நிவர்த்தி செய்ய, சேலம் அல்லது மதுரை ரயில்வே கோட்டத்துடன் இப்பகுதிகளை இணைக்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணியர், எம்.எல்.ஏ., வின் இந்த முக்கிய கோரிக்கையை தெற்கு ரயில்வே அதிகாரிகள் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

