UPDATED : ஜூலை 30, 2026 03:59 PM
ADDED : ஜூலை 30, 2026 03:41 PM
வால்பாறை: வால்பாறையில் பெய்யும் பருவமழையால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறையில் கடந்த நான்கு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. இதனால், இங்குள்ள ஆறு மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தீவிரமடைந்துள்ளதால் ஆறு மற்றும் அருவிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில், நேற்று காலை, 59.45 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,036 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 513 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்று காலை, 25.88 அடி நீர்மட்டம் இருந்தது. அதிகபட்சமாக மேல்நீராறில், 56 மி.மீ., மழையளவு பதிவானது.
