கொசு ஒழிப்பு பணியாளர்களும் ஊதிய உயர்வுக்கு எதிர்பார்ப்பு
கொசு ஒழிப்பு பணியாளர்களும் ஊதிய உயர்வுக்கு எதிர்பார்ப்பு
ADDED : செப் 21, 2025 11:22 PM
கோவை; மாநகராட்சி டி.பி.சி., பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குமாறு, பாரதிய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியில், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர், 910 கொசு ஒழிப்பு(டி.பி.சி.,) பணியாளர், 500க்கும் மேற்பட்ட டிரைவர், கிளீனர்கள் உள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன், தினக்கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதன் விளைவாக, ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இது போல் டி.பி.சி., பணியாளர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை வலுத்துள்ளது.
சங்கத்தின் துாய்மை பணியாளர் பிரிவு பொது செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:
ஒப்பந்த பணியாளர்களைப் போல், கொசு ஒழிப்பு பணியாளர்கள்(டி.பி.சி.,) உள்ளிட்டோருக்கும் ஒன்றரை மாதத்துக்குள், ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, பேச்சுவார்த்தையில் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.
ஆனால், இரு மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. டி.பி.சி., பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.486 வழங்கப்படுகிறது. துாய்மை பணியாளர்களை போன்று கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும், 'ஸ்பெஷல் டீம்' பணியாளர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாநகராட்சி கமிஷனரிடமும் முறையிட்டுள்ளோம். எங்களை போராட்டத்துக்கு தள்ள வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
