ADDED : பிப் 18, 2025 10:15 PM

மேட்டுப்பாளையம் ; கடவுள் ஒருவரே, வழிபடும் மனிதர்களின் அடையாளங்கள் தான் வெவ்வேறு. எனவே மாவும், மனிதரும் ஒன்றே, என, எம்.பி., ராஜா பேசினார்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள நகராட்சி நந்தவனம் பராமரிப்பு உரிமையை, மூன்று ஆண்டுகளுக்கு நிர்வாகம் செய்ய, அனைத்து ஹிந்து சமுதாய சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, நந்தவனத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு அனைத்து ஹிந்து சமுதாய சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் சுகுமார் வரவேற்றார். துணைத் தலைவர் காளியப்பன், பொருளாளர் அருணாச்சலக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, நகராட்சி நிர்வாகம் வழங்கிய ஆணையை, தலைவர் ஆறுமுகத்திடம் வழங்கி பேசியதாவது: மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் இறந்தவர்களுக்கு நாகரிகமான முறையில், சடங்குகள் நடைபெறுகின்றன.
இதுமாதிரி வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. கடவுள் ஒருவரே, வழிபடும் மனிதர்களின் அடையாளங்கள் தான் வெவ்வேறு. இங்கு சிவனை வழிபடுகின்றனர். வெளிநாடுகளில், அல்லா, கிறிஸ்துவை வழிபடுகின்றனர்.
மாவு ஒன்றே, அதில் இட்லி, தோசை, பணியாரம் ஆகியவை சுடுகின்றனர். எனவே மாவும், மனிதரும் ஒன்றே. இவ்வாறு எம்.பி., ராஜா பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் அனைத்து இந்து சமுதாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சங்கத் துணைச் செயலாளர் உதயகுமார் நன்றி கூறினார்.
