/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இஸ்லாமியர் தலைமையில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
/
இஸ்லாமியர் தலைமையில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
ADDED : செப் 19, 2025 08:46 PM
கோவை; ஒண்டிப்புதுார் அருகே இஸ்லாமியர் தலைவராக உள்ள கோயிலில், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் அக். 31ல் நடக்கிறது.
ஒண்டிப்புதுார், கொக்காளி தோட்டத்தில் அமைந்துள்ளது, கற்பகாம்பிகை அம்மன் கோயில். இதன் தலைவராக குத்துாஸ்பாய் உள்ளார். கோயில் திருக்கல்யாண உற்சவ விழா, அக். 30ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு, ஆறுமுக கவுண்டர் விநாயகர் கோயிலில் இருந்து, ஜமாப் இசை மற்றும் வாண வேடிக்கையுடன், தீர்த்த கலசங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அக். 31ம் தேதி காலை 5 மணிக்கு, சீர்வரிசை எடுத்து வரப்படுகிறது. காலை 6 முதல் 9 மணிக்குள், கற்பகாம்பிகை அம்மனுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோயில் செயலாளர் கணேசன் கூறுகையில்,''25 ஆண்டுக்கு முன், இக்கோயில் கட்டப்பட்டது. இப்பகுதியில் எண்ணெய் வியாபாரம் செய்து வந்த குத்துாஸ்பாய், கோயில் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, உதவிகளை செய்தார்.
முழு அர்ப்பணிப்புடன் கோயில் பணிகளை செய்து வருகிறார். அவரது தலைமையில், 2 கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
அவரை சிறப்பிக்கும் வகையில், தலைவர் பொறுப்பு கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் இவரது தலைமையில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடக்கிறது,'' என்றார்.